பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, January 3, 2011

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா





தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது?




பதில் :

شعب الإيمان للبيهقي - تخصيص سور منها بالذكر

حديث : ‏2392‏ 5394

أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا " " وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة " وكذا رواه يونس بن بكير ، عن السري *

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : பைஹகீ (2392)

மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.

இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து

அபூ ளப்யா என்பவரும்

அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்

அறிவிக்கின்றனர்.

இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380

10292 أبو شجاع نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة وأما

لسان الميزان ج: 7 ص: 60

583 أبو شجاع نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 7 பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான் பாகம் : 7 பக்கம் : 60

العلل المتناهية - (1 / 112)

باب ثواب من قرأ سورة الواقعة

151 - اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما

இமாம் அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது என்றும் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்

கெட்ட ஜின்கள் தான் பேய்களா

கெட்ட ஜின்கள் தான் பேய்களா



பேய்கள் போல் காட்சி தருவது கெட்ட ஜின்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா?


”இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்; இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இந்த நம்பிக்கை குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானது. பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றைஅவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:99, 100)

நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது. நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப்படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 1290, 3001, 6034

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ 991

இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.

பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.

*********************************************************************************

பேய் பிசாசு உண்டா ?
ஜின்களும் பேய்களும் ஒன்றா?

பேய்கள் என்பது இறந்தவர்களின் ஆவிகள் அல்ல, கெட்ட ஜின்கள் தான் என்ற தவறான கருத்தை சிலர் பரப்பி வருகின்றனர். இக்கருத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகி விடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.

பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூற மாட்டார்.

ஜின்கள் என்பது மனிதர்கள் அல்லாத வேறு ஒரு படைப்பாகும். ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.

மேலும் விபரமறிய :
நூலின் பெயர் : பேய் பிசாசு உண்டா
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள் : 56
விலை ரூபாய் : 12.00

.ஜின்கள் பற்றி மேலும் விபரமறிய ஜின்களும் ஷைத்தான்களும் என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தை நீங்கள் படிக்கலாம்.

வினிகர் பயன்படுத்தலாமா

வினிகர் பயன்படுத்தலாமா ??


வினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா? அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே? அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே


வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

3824 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்'' என்று சொன்னார்கள்.

முஸ்லிம் (4169)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?'' என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "காடி தான் குழம்புகளில் அருமையானது'' என்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (4170)

வினிகர் என்பது புளிப்பான ஒரு பொருள். இதில் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறினீர்கள். நாம் உண்ணும் எத்தனையோ பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீர், அரைத்த மாவு, தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்களால் தான் பால் தயிராகவும் மாவு புளிக்கவும் செய்கின்றது. இந்த வகை பாக்டீரியாக்களால் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் இதை உண்ணுவது தவறல்ல. வினிகரில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படுவதாக யாரும் கூறவில்லை.

அடுத்து ஆல்கஹாலில் இருந்து தான் வினிகர் தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளீர்கள். ஆல்கஹாலில் இருந்து மட்டும் வினிகர் தயாரிக்கப்படுவதில்லை. வேறுவழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

போதை தரும் பொருட்களை வினிகராக மாற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

3669حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ح و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ السُّدِّيِّ عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الْخَمْرِ تُتَّخَذُ خَلًّا فَقَالَ لَا رواه مسلم

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (4014)

எனவே போதை ஏற்படுத்தக்கூடிய அல்கஹாலை வினிகராக மாற்றினால் அதை உண்பது கூடாது. போதை இல்லாத பொருட்களிலிருந்து வினிகர் தயாரிக்கப்பட்டால் அதை உண்பது தவறல்ல.

முஹம்மத் எனப்பெயர் வைப்பதாக நேர்ச்சை செய்யலாமா

குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

பதில் :

வணக்க வழிபாடுகளில் மட்டுமே நேர்ச்சை

தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

முஹம்மது என்ற பெயரைச் சூட்டுவது வணக்கம் என்றோ அதனால் நன்மை கிடைக்கும் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இவ்வாறு பெயர் வைக்குமாறு அவர்கள் ஆர்வமூட்டவுமில்லை. எனவே இவ்வாறு பெயர்சூட்டுவது வணக்கம் அல்ல. வணக்கமில்லாத இந்தக் காரியத்தை நேர்ச்சையாக செய்ய முடியாது.

இதை நேர்ச்சையாக ஆக்காமல் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு முஹம்மது எனப் பெயரிட்டால் அதில் தவறேதுமில்லை. அவ்வாறு பெயர் வைக்கலாம்.

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா





எட்டு வயது பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா?

பதில் :

பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை.

எட்டு வயது பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களை பழக்குவதற்காக தொழுகையைத் திரும்ப தொழச் சொன்னால் அது நல்ல காரியமே.

ஏனென்றால் பொதுவாகக் குழந்தைகளை வணக்க வழிபாடுகளிலும் நற்காரியங்களிலும் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

குழந்தைகள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களைச் செய்வதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பயிற்சி அளித்துள்ளனர்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, "(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்'' என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, "பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (862)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : புகாரி (1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல் : புகாரி (1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு'' என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2596)