பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 9, 2018

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதியைக் கட்டவும், அதன் மேல் கட்டடம் கட்டவும் தடை செய்திருப்பதற்கு தெளிவான சான்றுகள் இருக்கும் போது, அப்படி கட்டினால் இடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அதற்கு மாற்றமாக மன்னர்கள் செய்த காரியத்தை எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்? இதை அறியாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை அவர்களே எப்படி பள்ளிவாசலில் சேர்த்து இருப்பார்கள்? தமது அடக்கத்தலத்தின் மீது அவர்களே மாடத்தை எப்படி கட்டி இருப்பார்கள்? இதைக் கூட சிந்திக்காமல் நபிகள் நாயகத்துடன் சம்மந்தமில்லாத ஒன்றை மார்க்க ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எனவே இது குறித்த வரலாற்றை நாம் அறிந்து கொள்வது கூடுதல் தெளிவைத் தரும். அந்த வரலாறு இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வந்தபோது, எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை மக்காவில் விட்டு விட்டு, எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஒரு பள்ளிவாசலை எழுப்ப முடிவு செய்தார்கள்.

ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ، فَسَارَ يَمْشِي مَعَهُ النَّاسُ حَتَّى بَرَكَتْ عِنْدَ مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، وَهُوَ يُصَلِّي فِيهِ يَوْمَئِذٍ رِجَالٌ مِنَ المُسْلِمِينَ، وَكَانَ مِرْبَدًا لِلتَّمْرِ، لِسُهَيْلٍ وَسَهْلٍ غُلاَمَيْنِ يَتِيمَيْنِ فِي حَجْرِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ: «هَذَا إِنْ شَاءَ اللَّهُ المَنْزِلُ». ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغُلاَمَيْنِ فَسَاوَمَهُمَا بِالْمِرْبَدِ، لِيَتَّخِذَهُ مَسْجِدًا، فَقَالاَ: لاَ، بَلْ نَهَبُهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَبَى رَسُولُ اللَّهِ أَنْ يَقْبَلَهُ مِنْهُمَا هِبَةً حَتَّى ابْتَاعَهُ مِنْهُمَا، ثُمَّ بَنَاهُ مَسْجِدًا، وَطَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَهُمُ اللَّبِنَ فِي بُنْيَانِهِ وَيَقُولُ، وَهُوَ يَنْقُلُ اللَّبِنَ: ” هَذَا الحِمَالُ لاَ حِمَالَ خَيْبَرْ، هَذَا أَبَرُّ رَبَّنَا وَأَطْهَرْ، وَيَقُولُ: اللَّهُمَّ إِنَّ الأَجْرَ أَجْرُ الآخِرَهْ، فَارْحَمِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَهْ “

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் ‘இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்’ எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலவசமாகப் பெற மறுத்து வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல் : புகாரி 3906

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.

தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.

தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப்பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திலிருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

இடங்களுக்கு அதிக மதிப்பு இல்லாத அன்றைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய நிலப்பரப்பைத் தமக்காக ஒதுக்கி இருக்க முடியும். ஆனால் மிகச் சிறிய அளவிலான இடத்தையே தமது மனைவியருக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

அவர்களின் குடிலின் பரப்பளவு எந்த அளவுடையதாக இருந்தது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 86)

382 – حدثنا إسماعيل، قال: حدثني مالك، عن أبي النضر مولى عمر بن عبيد الله، عن أبي سلمة بن عبد الرحمن، عن عائشة زوج النبي صلى الله عليه وسلم، أنها قالت: «كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي، في قبلته فإذا سجد غمزني، فقبضت رجلي، فإذا قام بسطتهما»، قالت: والبيوت يومئذ ليس فيها مصابيح

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்ற அளவுக்கு சிறிய அறைதான் அவர்களின் வீடாக இருந்தது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், மற்ற மனைவியருக்கும் இது போல் சிறிய அறைகளை ஒதுக்கினார்கள். பள்ளிவாசலின் வலப்புறமாக அவர்களின் வீடுகள் இருந்தன. வீட்டில் இருந்தே பள்ளிவாசலுக்கு வரும் வகையில் பள்ளிவாசல் பக்கம் வாசலும் இருந்தது.

அந்த வீடுகள் பள்ளிவாசலை ஒட்டி இருந்தாலும் அதற்குப் பள்ளிவாசலின் அந்தஸ்தை நபியவர்கள் வழங்கவில்லை. பள்ளிவாசலின் அந்தஸ்தை வழங்கி இருந்தால் அந்த வீடுகளில் மணைவியருடன் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்தி இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் பள்ளிவாசல் வேறாகவும், அவர்களின் வீடு வேறாகவும் தான் இருந்தது.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற பிரச்சனை வந்தது. அவர்களின் மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் தான் நபியவர்கள் மரணித்தார்கள் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த போதும் அவர்களின் வீடுகள் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படவில்லை. அவர்கள் மரணித்த பின்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும், மற்ற மனைவியருக்கான வீடுகளும் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பள்ளிவாசலில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பள்ளிவாசலை உறுதிப்படுத்தினார்கள். அதன் பின் உஸ்மான் (ரலி) ஆட்சியில் பள்ளிவாசலை விரிவாக்கம் செய்தார்கள். ஆனால் நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்தையும், அவர்களின் மனைவியருடைய வீடுகளையும் பள்ளிவாசலுடன் சேர்க்காமல் மற்ற மூன்று திசைகளில் தான் அவர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 97)

446 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ ” أَنَّ المَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ: وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً: وَبَنَى جِدَارَهُ بِالحِجَارَةِ المَنْقُوشَةِ، وَالقَصَّةِ وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقَفَهُ بِالسَّاجِ “

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல் செங்கற்கற்களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற்கூரை பேரீச்சை ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்சை மரங்களாலும் அமைந்திருந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்சை ஓலை ஆகியவற்றின் மூலமே அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்போன்றே பேரீச்சை மரங்களால் அமைத்தார்கள்.

பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்தார்கள். அதில் அநேக விஷயங்களை அதிகப்படுத்தினார்கள். வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட கற்களாலும், சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.

நூல் : புகாரி 446

இதன் பின்னர் ஹிஜ்ரி எண்பத்தி எட்டாம் ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுக்குள் வரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

قال العلامة الحافظ محمد بن عبد الهادي في ” الصارم المُنْكي ” (ص 136): ” وإنما أُدْخِلت الحجرة في المسجد في خلافة الوليد بن عبد الملك بعد موت عامة الصحابة الذين كانوا بالمدينة , وكان آخرهم موتا جابر بن عبد الله , وتوفي في خلافة عبد الملك , فإنه توفي سنة ثمان وسبعين والوليد تولى سنة ست وثمانين , وتوفي سنة ست وتسعين , فكان بناء المسجد وإدخال الحجرة فيه فيما بين ذلك

அனைத்து நபித்தோழர்களும் மரணித்து, ஒரு நபித்தோழர் கூட உயிருடன் வாழாத ஹிஜ்ரி எண்பத்தி எட்டாம் ஆண்டில் வலீத் பின் அப்துல் மலிக் என்பாரின் ஆட்சியில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்பட்டது. நபித்தோழர்களில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் பின் அப்துல்லா ஆவார். இவர்கள் 78 ஆம் ஆண்டு மரணித்தார்கள். அதன் பின்னர் தான் இவ்வாறு செய்யப்பட்டது

ஆதாரம் : இப்னு அப்துல் ஹாதி அவர்களில் அஸ்ஸாரிமுல் முன்கீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தைப் பள்ளிவாசலுடன் சேர்த்த போது அது அன்றைய ஆட்சியாளருக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அன்றைய நல்லறிஞர்கள் அனைவரின் அதிருப்தியை மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தியே சேர்க்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

البداية والنهاية (9/ 74)

وذكر ابن جرير أنه في شهر ربيع الأول من هذه السنة قدم كتاب الوليد على عمر بن عبد العزيز يأمره بهدم المسجد النبوي وإضافة حجر أزواج رسول الله ( ص ) وأن يوسعه من قبلته وسائر نواحيه حتى يكون مائتي ذراع في مائتي ذراع فمن باعك ملكه فاشتره منه وإلا فقومه له قيمة عدل ثم اهدمه وادفع إليهم أثمان بيوتهم فإن لك في ذلك سلف صدق عمر وعثمان فجمع عمر بن عبد العزيز وجوه الناس والفقهاء العشرة وأهل المدينة وقرأ عليهم كتاب أمير المؤمنين الوليد فشق عليهم ذلك وقالوا هذه حجر قصيرة السقوف وسقوفها من جريد النخل وحيطانها من اللبن وعلى أبوابها المسوح وتركها على حالها أولى لينظر إليها الحجاج والزوار والمسافرون وإلى بيوت النبي ( ص ) فينتفعوا بذلك ويعتبروا به ويكون ذلك أدعى لهم إلى الزهد في الدنيا فلا يعمرون فيها إلا بقدر الحاجة وهو ما يستر ويكن ويعرفون أن هذا البنيان العالي إنما هو من أفعال الفراعنة والأكاسرة وكل طويل الأمل راغب في الدنيا وفي الخلود فيها فعند ذلك كتب عمر بن عبد العزيز إلى الوليد بما أجمع عليه الفقهاء العشرة المتقدم ذكرهم فأرسل إليه يأمره بالخراب وبناء المسجد على ما ذكر وأن يعلى سقوفه فلم يجد عمر بدا من هدمها ولما شرعوا في الهدم صاح الأشراف ووجوه الناس من بني هاشم وغيرهم وتباكوا مثل يوم مات النبي ( ص وأجاب من له ملك متاخم للمسجد للبيع فاشترى منهم وشرع في بنائه وشمر عن إزاره واجتهد في ذلك وأرسل الوليد إليه فعولا كثيرة فأدخل فيه الحجرة النبوية حجرة عائشة فدخل القبر في المسجد وكانت حده من الشرق وسائر حجر أمهات المؤمنين كما أمر الوليد وروينا أنهم لما حفروا الحائط الشرقي من حجرة عائشة بدت لهم قدم فخشوا أن تكون قدم النبي ( ص ) حتى تحققوا أنها قدم عمر رضي الله عنه ويحكى أن سعيد بن المسيب أنكر إدخال حجرة عائشة في المسجد كأنه خشي أن يتخذ القبر مسجدا والله أعلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுடன் சேர்க்கப்பட்ட போது அன்று இருந்த நன்மக்கள் ஆட்சேபணை செய்தனர். நபியின் வீடு பேரீச்சை ஓலையால் வேயப்பட்டுள்ளதையும், குறைந்த உயரத்தில் அந்த வீடு அமைந்து இருப்பதையும், அதன் சுற்றுச் சுவர் செங்கற்களால் அமைக்கப்பட்டதையும் பிற்காலத்தவர் பார்த்து நபியின் எளிய வாழ்க்கையை அறிந்து கொள்வார்கள். இதனால் அவர்களும் எளிய வாழ்க்கை வாழ முன்மாதிரியாக ஆக்கிக் கொள்வார்கள். பிர்அவ்ன் மற்றும் கொடுங்கோல் மன்னர்களின் அரண்மனை போல் அலங்காரம் செய்யும் வகையில் பள்ளிவாசலுடன் அதைச் சேர்க்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்பை மீறி பள்ளிவாசலுடன் அடக்கத்தலம் சேர்க்கப்பட்ட போது நபியவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் அழுதது போல் அன்றைய நன்மக்களும் அறிஞர்களும் அழுதார்கள்.

ஹிஜ்ரி 200களில் வாழ்ந்த இமாம் இப்னு ஜரீர் அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இமாம் இப்னு ஜரீர் அவர்களின் இந்தக் கூற்றை இப்னு கஸீர் அவர்களும் தமது அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலில் எடுத்துக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படக் கூடாது என்று ஒட்டு மொத்த நல்லறிஞர்களும் போராடிய பிறகும் ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசலுடன் சேர்த்தார்கள். இதைக் கண்டு நல்லறிஞர்கள் கண்ணீர் விட்டு கதறத்தான் முடிந்தது.

இதன் பிறகும் இந்தச் செயலை மார்க்க ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

அடுத்து பள்ளிக்குள் நபியின் அடக்கத்தலம் சேர்க்கப்பட்டாலும் இப்போது நாம் காணும் பச்சை நிற குப்பா அப்போது கட்டப்படவில்லை. குப்பா இல்லாமல்தான் மூடப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு ஆட்சியாளரும் நபிகளின் கட்டளையை மீறி, நல்லறிஞர்களின் அறிவுரையைப் புறக்கணித்து யூதர்களின் வழிமுறையைப் பின்பற்றி பலவிதமான அலங்காரங்களைச் செய்யலானார்கள்.

وقال الصنعاني – رحمهُ اللهُ – في ” تطهير الاعتقادِ ” : ” فإن قلت : ” هذا قبرُ الرسولِ صلى اللهُ عليه وسلم قد عُمرت عليه قبةٌ عظيمةٌ انفقت فيها الأموالُ قلتُ : ” هذا جهلٌ عظيمٌ بحقيقةِ الحالِ فإن هذه القبةَ ليس بناؤها منهُ صلى اللهُ عليه وسلم ، ولا من أصحابهِ ، ولا من تابعيهم ، ولا من تابعِ التابعين ، ولا علماء الأمةِ ‏وأئمة ملتهِ ، بل هذه القبةُ المعمولةُ على قبرهِ صلى اللهُ عليه وسلم من أبنيةِ بعضِ ملوكِ مصر المتأخرين ، وهو قلاوون الصالحي المعروف بالملكِ المنصورِ في سنةِ ‏ثمانٍ وسبعين وست مئة ، ذكرهُ في تحقيقِ النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ ؛ فهذه أمورٌ دولية لا دليليةٌ ” .ا.ه

இமாம் சன்ஆனீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறை மீது அதிகமான பொருளாதாரத்தைச் செலவிட்டு மிகப் பெரிய குவிமாடம் கட்டலாமா? என்று நீ வினவினால் நான் சொல்வேன் : உண்மையில் இது மிகப் பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் இது நபியவர்களின் கட்டளை காரணமாகவோ, அவர்களின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) மூலமாகவோ, அவர்களுக்கு அடுத்த காலத்தைச் சார்ந்தவர்கள் (தாபியீன்கள்) மூலமாகவோ, அவர்களின் காலத்தை அடுத்துள்ள காலத்தைச் சார்ந்தவர்கள் (தப்வுத் தாபியீன்கள்) மூலமாகவோ, சமூக உலமாக்கள் அல்லது சமுதாய இமாம்கள் மூலமாகவோ கட்டப்பட்ட கட்டடம் அல்ல.

பிற்காலத்தில் வந்த எகிப்து மன்னர்களில் ஒருவர் கட்டியதாகும். இக்கட்டடம் ஹிஜ்ரி 678ஆம் ஆண்டு மன்னர் அல்மன்சூர் என்று அறியப்பட்ட கலாவுன் அஸ்ஸாலிஹீ என்பவரால் கட்டப்பட்டது. இது அரசியல் விவகாரம்தான். மார்க்க ஆதாரம் இல்லை

என்று தஹ்கீக் அன்னுஸ்ரா பி தல்ஹீஸ் மஆலிமி தாரில் ஹிஜ்ரா என்ற நூலில் இமாம் சன்ஆனி குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஏராளமான அறிஞர்கள் சுல்தான் கலாவூன் என்ற மன்னரின் செயல் மார்க்கத்துக்கு எதிரானது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 700 ஆண்டுகளுக்குப் பின்னர் கெட்ட ஆட்சி நடத்திய ஒரு மன்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டிய குப்பாவை ஆதாரமாகக் காட்டியே தர்காக்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இது குறித்து செய்த கடுமையான எச்சரிக்கைகள் நமக்கு ஆதாரமா? அவர்களின் கட்டளைக்கு எதிரான ஒரு கேடுகெட்ட மன்னன் செய்தது ஆதாரமா? முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது சுல்தான் கலாவூனைப் பின்பற்றி தர்கா கட்டினோம் என்று அல்லாஹ்விடம் சொல்ல முடியுமா?.