பள்ளிவாசலில் விற்பதும், வாங்குவதும் கூடுமா⁉️
பள்ளிவாசலில் வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும், வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நூல் : திர்மிதி 296
பள்ளிவாசலில் சப்தமிட்டு காணாமல் போன பொருளை ஒருவன் தேடுவதைக் கண்டால் அல்லாஹ் அதை உனக்கு திரும்பக் கிடைக்காமல் செய்யட்டும் என்று கூறுங்கள். ஏனெனில் பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்:568)
பள்ளிவாசலில் விற்பது, வாங்குவது வெளியே காணாமல் போன பொருள் பற்றி பள்ளிவாசலுக்குள் விசாரிப்பது ஆகியவற்றைச் செய்யக் கூடாது என்றும் பள்ளிவாசல் இதற்காகக் கட்டப்படவில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் காரணத்துடன் இதைத் தடை செய்து விட்டார்கள். இதை மீறுவது பள்ளிவாசல் கட்டப்பட்ட நோக்கத்துக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் மஸ்ஜித் (பள்ளிவாசல்) என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொழுகை நடத்துவதற்காக நாம் ஒதுக்கிக் கொண்ட இடம் தான் பள்ளிவாசலாகும். பள்ளிவாசல் என்பதன் நேரடிப் பொருள் இதுதான்.
ஆனால் தொழுகை தவிர வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்காகவும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை ஒதுக்கி இருப்போம். அவை பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது.
ஆனாலும், அந்த இடங்களும் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின் வரும் ஆதாரங்களில் இருந்து அறியலாம்.
ஸஅது (ரலி) அவர்கள் அகழ்ப்போரின் போது தாக்குதலுக்கு உள்ளானார். அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அவருக்கு ஒரு கூடாரம் அமைத்தார்கள். (புகாரி: 463)
ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். (நீண்ட சம்பவம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. (புகாரி: 439)
நாங்கள் நபியவர்களுடன் இருக்கும்போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார். (புகாரி: 63)
அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். (புகாரி: 454)
விபச்சாரம் செய்த யூத ஆணும், யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாஸா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். (புகாரி: 1329)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூணில் கட்டி வைத்தனர். (புகாரி: 469)
பள்ளிவாசல் என்று இந்த ஹதீஸ்களில் கூறப்பட்ட இடங்கள் தொழுவதற்கான இடமல்ல. மாறாக பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும். இதனால் தான் தொழுகையல்லாத மற்ற காரியங்கள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன.
நமது காலத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கே சென்று மலஜலம் கழிப்பதால் பள்ளிவாசலை அசுத்தமாக்கி விட்டதாகச் சொல்ல மாட்டோம். பள்ளிவாசல் வளாகத்தில் இமாம்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்தாலும் அவை பள்ளிவாசல் அல்ல.
எனவே தொழுவதற்காக ஒதுக்கப்பட்ட புனிதமான இடம் தவிர மற்ற இடங்கள் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது. அது போல் பள்ளிவாசலாக ஆக்கப்படாத வளாகத்துக்குள் விற்பது, வாங்குவது ஆகியவை பள்ளிவாசலில் விற்பதாக ஆகாது.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து வியாபாரம் செய்துள்ளனர். பின்வரும் ஹதீஸில் இதைக் காணலாம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்!என்றேன். என்ன விஷயம்? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!என்றேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டினார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், சரி என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புகாரி: 2097)
பள்ளிவாசலில் வியாபாரம் செய்யலாம் என்பதற்கு இதை ஆதாரமாக காட்டக் கூடாது. தங்கத்தை எடை போட்டுக் கொடுத்தது தொழுவதற்கான இடத்தில் அல்ல. அரசு கஜானாவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தான்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.