பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, April 30, 2018

தர்காக்களில்_அற்புதம்_நடக்கவில்லையா

#நம்பிக்கை

#தர்காக்களில்_அற்புதம்_நடக்கவில்லையா?

#பதில்

கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்?

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3358

மனிதன் மரணித்த பின் அவருக்கும், இவ்வுலகுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99, 100

மரணித்தவருக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா என்ற நமது நூலில் காணலாம்.

மேலும் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் “இவர் ஒரு மகானா” என்று கூறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதையும், மற்றும் குழந்தையில்லாமலேயே மரணித்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.

இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் ஆதாரமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறிவிடும்.

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

ஒவ்வொரு காரியம் நிகழ்வதற்கும் அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்த நேரம் வந்ததும் அது நிகழ்கிறது.

தர்கா வழிபாடு பாவம்; அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரும், இன்னும் பலரும் கருதுகின்றனர். இவர்களுக்கும் காரியங்கள் கைகூடுகின்றன.

தர்கா வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பிறப்பது போல் அதை எதிர்ப்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. தர்கா வழிபாடு செய்யும் சிலர் செல்வந்தர்களாக ஆவது போல் அதை எதிர்ப்பவர்களிலும் சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். காரணம் அதற்கான நேரம் வந்து விட்டது தான். தர்கா வழிபாடு செய்வோர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே மகான்கள் உலகில் உயிரோடு வாழும் போதும் அவர்களால் அற்புதம் செய்ய முடியாது. மரணித்து விட்டால் சாதாரண காரியங்களைக் கூட அவர்கள் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

Sunday, April 29, 2018

தர்காக்களில்_ஜியாரத்_செய்யலாமா

#நம்பிக்கை

#தர்காக்களில்_ஜியாரத்_செய்யலாமா?

#பதில்

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

حدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب قالا حدثنا محمد بن عبيد عن يزيد بن كيسان عن أبي حازم عن أبي هريرة قال زار النبي صلى الله عليه وسلم قبر أمه فبكى وأبكى من حوله فقال استأذنت ربي في أن أستغفر لها فلم يؤذن لي واستأذنته في أن أزور قبرها فأذن لي فزوروا القبور فإنها تذكر الموت

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.

முஸ்லிம் : 1622

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும் குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு சியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவு படுத்தும் எண்ட காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்ட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.

எனவே அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

حدثنا داود بن رشيد حدثنا شعيب بن إسحق عن الأوزاعي عن يحيى بن أبي كثير قال حدثني أبو قلابة قال حدثني ثابت بن الضحاك قال نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلا ببوانة فأتى النبي صلى الله عليه وسلم فقال إني نذرت أن أنحر إبلا ببوانة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيها وثن من أوثان الجاهلية يعبد قالوا لا قال هل كان فيها عيد من أعيادهم قالوا لا قال رسول الله صلى الله عليه وسلم أوف بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم

“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது “இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே “இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்

பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

186 – حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا وكيع عن سفيان ح وحدثنا محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة كلاهما عن قيس بن مسلم عن طارق بن شهاب – وهذا حديث أبى بكر – قال أول من بدأ بالخطبة يوم العيد قبل الصلاة مروان فقام إليه رجل فقال الصلاة قبل الخطبة. فقال قد ترك ما هنالك. فقال أبو سعيد أما هذا فقد قضى ما عليه سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول « من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ».

صحيح مسلم [1 /50]

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது.

பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமைûயும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

Friday, April 27, 2018

இப்லீஸ்_தஜ்ஜால்_ஆகியோர்_அற்புதங்கள்_செய்வது_எப்படி

#நம்பிக்கை

#இப்லீஸ்_தஜ்ஜால்_ஆகியோர்_அற்புதங்கள்_செய்வது_எப்படி?

#பதில்

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம்.

இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்கு பதிலாக முன்வைக்கிறார்கள்.

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது?

தஜ்ஜால் என்பவன் இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பிப்பான்; இன்னும் பல காரியங்களைச் செய்வான் என்று ஹதீஸ்களில் உள்ளது. மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை எப்படி இவர்கள் செய்ய முடிகிறது?

இவைதான் அந்த எதிர்க்கேள்விகள்!

இப்லீஸ் செய்யும் அற்புதம் அவனது ஆற்றலால் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வின் அனுமதியோடு செய்யப்படுகிறதா? என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

வின்னுலகில் இருந்து இப்லீஸை இறைவன் வெளியேற்றும் போது என்ன நடந்தது என்பதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான். “அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 7:13,14,15

இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்1 வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள்1 வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 15:34,35,36,37,38

“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான். “நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி” என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. “எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 17:62, 63, 64, 65

குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

திருக்குர்ஆன் 16:98,99,100

தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான். “என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று கூறினான். “இதோ என்னிடம் நேரான வழி உள்ளது” என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

திருக்குர்ஆன் 15:35-42

இந்த வசனங்கள் கூறுவதென்ன? ஷைத்தானுக்கு மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி வழிகெடுக்கும் ஆற்றல் அறவே இல்லை. நான் மனிதனை வழிகெடுத்துக் காட்டுகிறேன்; எனக்கு அனுமதியும், அவகாசமும் வழங்கு என்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வேண்டினான். அல்லாஹ்வும் அதற்கு அனுமதி வழங்கினான். ஆனாலும் உறுதியான மக்களிடம் நீ தோற்றுவிடுவாய் என்ற பலவீனத்துடன் அவனுக்கு அல்லாஹ் இந்த அனுமதியை அளித்தான்.

அல்லாஹ் அனுமதி கொடுத்ததாகத் தெளிவாக அல்லாஹ்வே சொல்லி இருக்கும் போது ஷைத்தான் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்று ஆகாது. இதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தலிலும் சேராது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணைகற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது. ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான் என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீஸுக்கு அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்தது போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான் என்பதால் இதை நம்புவது இணைகற்பித்தலில் சேராது.

தஜ்ஜால் என்பவன் தான் நினைத்த போதெல்லாம் நினைத்த அற்புதத்தைச் செய்ய வல்லவன் என்று நம்பினால் தான் அது இணைகற்பித்தலாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

நூல் : புகாரி 1882, 6599, 1749

இறைவன் அனுமதித்த காரணத்தால் தான் ஒருவரை ஒரு தடவை தஜ்ஜால் உயிர்ப்பித்துக் காட்டுகிறான். அதே மனிதனை மீண்டும் கொலை செய்ய முயலும் போது அவனால் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம் இதற்கு அவனுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுதான்.

சூனியக்காரனுக்கும் இதுபோல் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்று இவர்கள் சொல்வார்களானால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தாக வேண்டும்.

எந்தக் காரியங்களைச் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான்? அதற்கான ஆதாரம் என்ன?

எல்லாக் காரியங்களையும் செய்ய அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

எல்லா சூனியக்காரனுக்கும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளானா? அதற்கான ஆதாரம் என்ன?

அனைவருக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை; சிலருக்குத் தான் அனுமதி அளித்துள்ளான் என்றால் அந்தச் சிலர் யார்? அதற்கான ஆதாரம் என்ன?

இக்கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை என்றால் சூனியக்காரனுக்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை என்பது உறுதி.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவியரிடையே பிரிக்கலாம் என்று 2:102 வசனம் கூறுவதாக இவர்கள் வாதிடுகின்றனர். அவ்வசனத்தில் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதுதான் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்பதற்கான ஆதாரம் என்று இவர்கள் கூறுவார்களானால் அது அவர்களது அறியாமையைத் தான் காட்டும்.

அல்லாஹ் நாடி விட்டான்; அனுமதித்து விட்டான் என்ற சொல்லமைப்புதான் அனுமதியைக் குறிக்கும். அல்லாஹ் நாடினால் அனுமதித்தால் என்று கூறப்பட்டால் அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை என்பதற்குத்தான் ஆதாரமாகும்.

ஒரு மருத்துவர் தரும் மருந்து அல்லாஹ் நாடினால் குணமளிக்கும் என்று கூறப்பட்டால் அந்த மருந்து குணமளிக்கும் என்று அல்லாஹ் அனுமதித்த்தானா? இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள்.

இம்மருந்து நிச்சயமாக இந்த விளைவை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் கட்டாயம் நடக்கும் என்று தான் கூற வேண்டும். அல்லாஹ் நாடிவிட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பின் அல்லாஹ் நாடினால் என்று கூற முடியாது.

எனவே சூனியக்காரனுக்கு எந்த அனுமதியும் அல்லாஹ்வால் வழங்கப்படவில்லை என்பதால் அல்லாஹ்வால் அனுமதி வழங்கப்பட்ட தஜ்ஜால், ஷைத்தான் ஆகியோருடன் சூனியக்காரனை ஒப்பிட முடியாது.