பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, June 27, 2020

இணை கற்பித்தல்இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?


இணை கற்பித்தல்
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இணைகற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணைவைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணைவைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளைச் சரியாக நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணைவைப்பும் நுழைந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகே முஸ்லிம் சமுதாயத்தில் இணைகற்பிப்பவர்கள் உருவானதால் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காது என்றாலும் எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.

ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9
இணைகற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.

அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் கீற்றுக் கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணைகற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.

எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.

இன்னும் சொல்லப்போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம். ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.

இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.

எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணைவைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.

لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

திருக்குர்ஆன் 3:28
மூமின்களைத்தான் (அதாவது இணைகற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாது என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.

பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.

ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون(23)9

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 9:23
الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا(139)4
நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

திருக்குர்ஆன் 4:139
ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا(144)4
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

திருக்குர்ஆன் 4:144
தொழுகையில் நமக்காகவும், அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.

ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113
இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை – நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றது. அவர்களில் இணைகற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு, இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படிக் கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.

ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் சிலர் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து அவ்வாறு கூறக் கூடாது; ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.

''நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.''நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக' கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:14
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலச் சொற்களைக் கவனிக்க வேண்டும்.

கிராமவாசிகள் ஆமன்னா எனக் கூறினார்கள். இது ஈமான் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மை மூமின்கள் என்று அவர்கள் வாதிட்டனர்.

நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை என்று கூறி அவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டு அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான்.

அஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா (முஸ்லிம்களாக இருக்கிறோம்) என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்ல அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.

இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.

صحيح البخاري

27 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا» فَسَكَتُّ قَلِيلًا، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي، فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلاَنٍ؟ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا». ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي، وَعَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنِّي لَأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ»
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான் என்றார்கள்.

நூல் : புகாரி 27
உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு! அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري

391 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المَهْدِيِّ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ المُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் அவனுடைய தூதரின் பொறுப்பும் உண்டு. எனவே அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பில் அல்லாஹ்வுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 391
صحيح البخاري

392 – حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 392
صحيح البخاري

393 – قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ، أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ العَبْدِ وَمَالَهُ؟ فَقَالَ: «مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ المُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ  مَا عَلَى المُسْلِمِ»
மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா! (இஸ்லாமிய அரசில்) ஓர் அடியாரின் உயிரையும், பொருளையும் காப்பது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு. என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 393
ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார். ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அரசில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இதை அடிப்படையாக வைத்து தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.

(நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானிகள், 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.)

உலக விஷயங்களில் அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் நாம் சேர்த்தாலும் அவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கவும் வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.

மாற்றுக் கருத்துக்கு மறுப்பு

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு சமூக ஊடகங்களில் சில வாதங்களை எடுத்து வைக்கப்படுகின்றன.

முதல் வாதம்

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன்.

திருக்குர்ஆன் 31:23
தோல்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் லா இலாஹ இல்லல்லாஹு' என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபிகள்  நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்' நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள்.

அறிவிப்பாளர்: கபீஸாபின்துவைபு (ரழி)

நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)
இவ்வசனமும், இந்த நபிமொழியும் சொல்வது என்ன? ஒருவன் உள்ளத்தில் உள்ளதை மற்றவர்கள் அறிய முடியாது என்று சொல்கின்றன. அப்படி இருக்கும் போது ஒருவரைப் பற்றி இணைகற்பிப்பவர் என்று எப்படி முடிவு செய்ய இயலும்? இணை வைப்பவர் என்று முடிவு செய்ய முடியாததால் அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று எப்படி முடிவு செய்ய முடியும்?

இதுதான் மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதம்.

ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது மறுக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

இணைகற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணைவைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

உள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்று பின்பற்றலாம் என்று கூற வேண்டும்.

ஏனெனில் கஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இணைகற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும். ஒருவன் இணைகற்பிப்பவன் என்பதும், ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம் என்று இவர்கள் வாதிட்டால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பதே பொருள்.

உங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்! கெட்டவனுக்குத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறினால் வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு எடுங்கள் என்பதே அதன் பொருளாக இருக்க முடியும். 

எனவே இவர்கள் வாதத்துக்கும், இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாவது ஆதாரம்

மறுமை நாளில் மார்க்க அறிஞர், செல்வந்தர், உயிர் தியாகி ஆகியோர் நரகில் தள்ளப்படுவார்கள் என்ற ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இம்மூவரின் வெளிப்படையான செயல்களைப் பார்த்து  நல்லவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உள்ளத்தைப் பார்க்கும் அல்லாஹ் வேறு முடிவு எடுக்கிறான்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது.

ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

இப்படி வாதிடுகின்றனர்.

மீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம். நாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படையானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித் தான் இருக்கும் என்று கூற முடியாது.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின்படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூறியவர்கள் கண்டிக்கவோ, தண்டிக்கவோ படவில்லையே?

சரி இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறார்களா? வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர்? அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியாது என்று கூறக் காணோமே?

மார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்தத் தவறான வாதத்தை எடுத்து வைப்பவர்கள் சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்?

இதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.

எந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து அதன்படி நடக்கத் தயாரா? இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது உளறி பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக உளறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

மனிதர்கள் இவ்வுலகில் வாழும் போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன?

எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன்படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம்

இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

என்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்குச் சார்பாக தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறு விதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.

மேற்படி கருத்துடையவர்கள் நீதிபதிகளாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன் என்று தீர்ப்பளிப்பாரா?.

ஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா? இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவாரா?

இஸ்லாத்தைக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவுபடுத்துகிறோம்.

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment