பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, April 26, 2020

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை

*கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது❓*



✅ கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு.

*குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை* பெற்றுள்ளனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: நஸாயீ 2315

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

மேற்கண்ட *சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?*

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

*ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம்* என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: *புகாரி 1950*

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் குடும்பத்தில் இது நடந்துள்ளதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

*விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை* என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்புகளை அந்தந்த வருடத்திற்குள்ளேயே வைத்து முடித்துவிட வேண்டும் என்று  சிலர் கருதுகின்றனர்.

*கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் அளிக்கப்பட்ட விதிவிலக்கைச் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*

கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெற்று பிறகு இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதலையும், கணக்கிட்டால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவர்கள் ரமலானில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகை   வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

அந்த ஆண்டுக்குள்ளாகவே விடுபட்ட நோன்புகளை வைத்து முடித்துவிட வேண்டுமென்றால் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து சலுகை வழங்கியது அர்த்தமற்றதாக ஆகிவிடும். 

எனவே அந்தந்த வருடத்திற்குள்ளேயே அந்தந்த ஆண்டு விடுபட்ட நோன்புகளை வைத்து முடித்துவிட வேண்டும் என்ற கருத்து நோயாளிகள் மற்றும் பயணிகளுக்குத்தான் பொருந்தும்; இவர்களுக்குப் பொருந்தாது.

இருந்த போதிலும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து நோன்பை விட்டுவிட்டு அவற்றை மொத்தமாக வைப்பது அவர்களுக்கு மேற்கொண்டு சிரமத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் அந்த வருடத்தில் விடுபட்ட நோன்புகளில் இரண்டு மூன்று நோன்புகளை வைத்து வந்தால் நோன்புகளை களாச் செய்வது எளிதாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள  வேண்டும்.

*மேலும் மரணத்தை எதிர்நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்*.

*கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும் விட்ட நோன்புகளை நோற்கத் தேவையில்லை* என்று சிலர் கூறுகின்றனர். *இது தவறாகும்.*

மார்க்கத்தின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

பொதுவாக ஒரு வணக்கத்தை இறைவன் கடமையாக்கினால் அது அனைவருக்கும் கடமை என்பது தான் பொருள். யாருக்காவது கடமை இல்லை என்று கூறுவதாக இருந்தால் அவ்வாறு கூறுவோர் தான் தெளிவான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். *சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)*

திருக்குர்ஆன் 2:186

மேற்கண்ட வசனத்தில் ரமலானை அடைவோர் மீது நோன்பு கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.

*மாதவிடாயுள்ளவர்களும், பாலூட்டுபவர்களும் நோன்பை விட்டு விட்டு மீண்டும் நோற்கத் தேவை இல்லை* என்று கூறினால் அவர்களுக்கு *நோன்பு கடமை இல்லை* என்று ஆகிவிடும்.

இந்தப் பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்கு இருக்கின்றது என்று ஒருவர் கூறினால் குர்ஆன், ஹதீஸிலிருந்து அதற்குத் தெளிவான ஆதாரம் காட்ட வேண்டும். அதாவது ஒருவருக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சலுகையளித்துள்ளான். அந்தச் சலுகை என்பது, இப்போதே நிறைவேற்றாமல் வேறு நாட்களில் நிறைவேற்றலாம் என்பது தான். இந்த வசனமே இதை விளக்கி விடுகின்றது.

எனவே அல்லாஹ் சலுகை அளித்துள்ளான் என்பதற்கு அவர்கள் அறவே நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று பொருள் கொள்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலருக்கு நோன்பில் சலுகை அளித்தார்கள் என்றால் அந்தச் சலுகையும் வேறு நாட்களில் அதை நிறைவேற்றலாம் என்ற சலுகை என்றே விளங்க வேண்டும்.

*கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பு கடமையில்லை என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.*

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோன்பு கடமையா? இல்லையா? என்பது தான். *பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோன்பு கடமையே இல்லை என்றால் கண்டிப்பாக அது மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கும்.*

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

*பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்’* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 2408

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்பதை இந்த ஹதீஸில் இருந்து விளங்க முடியும்.

பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

*கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

*ஏகத்துவம*

No comments:

Post a Comment