பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, February 22, 2018

தல்பியா_சொன்ன_பிறகு_இரண்டு_ரக்அத்_தொழ_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#தல்பியா_சொன்ன_பிறகு_இரண்டு_ரக்அத்_தொழ_வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

#பதில்

துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.
யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ செல்பவருக்கு பொருந்தாது.

நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.

நூல்: புகாரி 1534

இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.

இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா?

#இல்லை

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா’வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, “பைதாஉ’ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 2184

இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின்_நிய்யத்_லப்பைக்க_உம்ரதன்_ஃபீ_ஹஜ்ஜதின்_என்று_சேர்த்து_சொல்லவேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராமின்_நிய்யத்_லப்பைக்க_உம்ரதன்_ஃபீ_ஹஜ்ஜதின்_என்று_சேர்த்து_சொல்லவேண்டுமா? #லப்பைக்க_உம்ரதன்_அல்லது_அல்லாஹும்ம_லப்பைக்க_உம்ரதன்_என்பது_மட்டும்_போதுமானதா?

#பதில்

கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள் “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை – (குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1568

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், “லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்’ என்றோ, “லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்’ என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும்.

தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

ஹஜ் நிய்யத்_உள்ளதா

#ஹஜ்_உம்ரா

#நான்_ஹஜ்_செய்ய_விரும்புகிறேன்; #எனக்கு_அதை_எளிதாக்கி_ஏற்றுக்_கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) #என்று_நிய்யத்_உள்ளதா?

#பதில்_இது_பித்அத்

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும்.

உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.

இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2194, 2195

தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, “நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று சிலர் கூறுகின்றர். இது பித்அத்தாகும்.

இஹ்ராம்_ஆடை_அணியும்போது_கிப்லாவை_முன்னோக்கி_நின்றுதான்_

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_ஆடை_அணியும்போது_கிப்லாவை_முன்னோக்கி_நின்றுதான்_கட்டவேண்டுமா? #அல்லது_இஹ்ராம்_கட்டும்_எல்லைக்கு_வந்து_நிய்யத்_சொல்லும்_போது_தான்_கிப்லாவை_முன்னோக்கி_இருக்கவேண்டுமா?

#பதில்

#ஆடைக்கு_இல்லை.
#மீக்காத்தில்_தல்பியாவின்_போது_கிப்லாவை_நோக்க_வேண்டும்.

இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

(நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258)

ஒரே_பயணத்தில்_பல_உம்ராக்கள்_செய்யலாமா

#ஹஜ்_உம்ரா

#ஒரே_பயணத்தில்_பல_உம்ராக்கள்_செய்யலாமா?

#துல்ஹஜ்_மாதத்திற்கு_முன்பே_ஹஜ்ஜுக்குச்_சென்றவர்கள்_பலமுறை_உபரியான_உம்ராக்கள்_செய்யலாமா?

#பதில்:  #செய்யலாம்

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.

இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை.

ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள்.

அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 46

கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை “நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர’ என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:158)

ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, “நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்’ என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் (1463)

எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது.

ஒவ்வொரு_உம்ராவையும்_முடித்தபிறகு_இஹ்ராமிலிருந்து_விடுபட_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#ஒவ்வொரு_உம்ராவையும்_முடித்தபிறகு_இஹ்ராமிலிருந்து_விடுபட_வேண்டுமா?

#அல்லது_விடுபடாமலே_தொடர்ந்து_பல_உம்ராக்கள்_செய்யலாமா?

#இஹ்ராமிலிருந்து_விடுபட்டு_மீண்டும்_இஹ்ராம்_கட்ட_வேண்டும்_என்றால்_எங்கிருந்து_இஹ்ராம்_கட்ட_வேண்டும்?

#அதாவது_ஒரே_பயணத்தில்_மீண்டும்_உம்ரா_செய்தால்_இஹ்ராம்_எங்கு_கட்டுவது?

#பதில்: #ஆயிஷா_பள்ளிக்கு_சென்று_கட்டவேண்டும்.

உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும்.

இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. அதாவது அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தானாகவே உம்ராவிலிருந்து, இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுகின்றார்.

ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல்: புகாரி 1529

ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.

மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி 319

வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1788

நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது.