பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, March 16, 2011

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?




நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தந்தைக்கும் அவர்களின் பாட்டனாருகும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.

இதை திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது

ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். . (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். . கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 36: 2-6

ஆனாலும் அவர்கள் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:62

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 5:69

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

திருக்குர்ஆன் 22:17

இவ்வசனங்களில் ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயம் என்று கூறுகின்றனர். நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற சாதாரண உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. மேற்கண்ட வசனங்களில் ஸாபியீன்களின் நன்மைகளுக்கு கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபிகள நாயகத்துக்கு வைத்த பெயர் ஸாபியீன்களில் ஒருவர் என்பதாகும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் இதில் இருந்து நாம் அறியலாம். இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

அபூதர் ரலி அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள் என்று புஹாரி 3522 வது ஹதீஸில் காணலாம். இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு அந்த மக்கள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.

அது போல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் அவர்கள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்கவும் முன் வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர். புஹாரி 4339, 7189

ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியாலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.

இப்படி வாழாமல் அறிவைப் பயன்படுத்தாமல் சிலைகளை வணங்கிய காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிறார்கள்.

நன்மை தீமைகளை பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா??

நன்மை தீமைகளை பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா


இரண்டு வானவர்கள் இருப்பதாகவும் ஒருவர் தோள் புஜத்தில் அவர்கள் அமர்ந்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நன்மையைப் பதிவு செய்வதாகவும் மற்றவர் தீமையைப் பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இது உண்மையா

இரண்டு வானவர்கள் உள்ளதாகவும் அவர்கள் அனைத்தையும் பதிவு செய்வதாகவும் குர்ஆன் கூறுகிறது. ஒருவர் நன்மையை எழுதுவார் மற்றவர் தீமையை எழுதுவார் என்பதற்கு நாம் எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. குர்ஆனில் வந்துள்ள கீழ்க்கண்ட செய்திகளைத் தவிர ஹதீஸ்களில் மேலதிகமாக எதுவும் கூறப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.. வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன் 50:16-18

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். . நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

திருக்குர்ஆன் 82:10-12

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா



ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது

இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாக தருகிறோம்

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.

2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...

...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.

தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.

ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'

இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?


துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?


துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي

ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ (2373)

மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து இவ்வாறு நோன்பு வைக்கின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி ஆதாரமாக உள்ளது.

மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)

இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை திக்ரு தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

எனவே இந்த பொதுவான ஆதாரத்தின் அடிப்டையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அதைத் தவறு என்று கூற முடியாது.

இந்த நாட்களில் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததே இல்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இதற்கு எதிரானது அல்ல.

2012حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2186)

இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாக கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.



வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய ப்ராஜெக்ட் செய்து கொடுக்கலாமா ??

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய ப்ராஜெக்ட் செய்து கொடுக்கலாமா ??


நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். புதிய புராஜக்ட் ஒன்றில் என்னை வேலை செய்யுமாறு அழைக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு

இந்த ப்ராஜெக்ட் ஒரு பிரபல வங்கி ப்ராஜெக்ட். இந்த ப்ரொஜெக்டை நான் வேலை பார்க்கும் கம்பெனி அவுட் சோர்ஸ் செய்து எடுத்து செய்து கொடுப்பார்கள். இந்த ப்ராஜெக்ட் அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மற்றும் அவர்கள் தெரிவிக்கும் வங்கி சம்பந்தமான பிரச்சனைகளை சேகரித்து தக்க அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும். இது தான் அந்த ப்ரோஜெக்ட்ன் தகவல். இப்படிப்பட்ட ப்ரோஜெக்ட்ல் நான் வேலை செய்வது மார்கத்தில் அனுமதிவுண்டா?




வங்கித் தொடர்பான தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியைச் செய்வது கூடுமா? என்பது உங்கள் கேள்வியின் சாராம்சம். வங்கி வட்டியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளது.

வட்டித் தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)

வட்டிப் பணத்தை வசூலித்தல் வட்டிக் கணக்குப் பார்த்தல் போன்ற வேலைகள் வட்டி தொடர்புடைய வேலைகள் என்பதால் இவற்றைச் செய்வது கூடாது.

வங்கியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது வெள்ளையடிப்பது போன்றவை வட்டியுடன் தொடர்புடைய பணிகள் அல்ல. எனவே இவற்றைச் செய்வது கூடும்.

வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பது வட்டிக்குத் தொடர்பில்லாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பணியாகும்.

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன


இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன ??


சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.

அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். "ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

திருக்குர்ஆன்2:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். "என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக

திருக்குர்ஆன்(19:41,42)

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர். "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங் குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' என்று கூறினார்.

திருக்குர்ஆன் (21:62-67)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தன் தந்தையிடமும், சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலமும், விவாதப் போங்கிலும் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது,

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன்(11:32)

திருக்குர்ஆனில் பல வசனங்கள் இறைமறுப்பாளர்களுடன் விவாதம் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ் அறிவிப்பூர்வமாகவும் மறுப்புத் தெரிவிக்க முடியாத வகையில் ஆணித்தரமாகவும் பதிலளிக்கின்றான்.

இந்த மார்க்கத்தில் விவாதத்திற்கு வேலையில்லை என்றால் எதிரிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு இவ்வாறு இறைவன் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இறைவன் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்தை அளிக்கின்றான். எனவே இஸ்லாம் குருட்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

இறை மறுப்பாளர்களுடன் விவாதம் செய்வது உறுதியான நம்பிக்கைக்கு எதிரான காரியமல்ல. மாறாக உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாத்தை உறுதியாக நம்பக்கூடியவர்களே அதற்காக விவாதம் செய்ய முன்வருவார்கள்.

இந்த விவாதங்களால் நம்முடன் விவாதம் செய்யக்கூடிய இறை மறுப்பாளர்கள் நேர்வழி பெறாவிட்டாலும் விவாதத்தைப் பார்க்கின்ற பலர் நேர்வழி அடையும் நிலை ஏற்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இந்த விவாதங்களின் மூலம் கொள்கை உறுதியும் கொள்கைத் தெளிவும் முன்பை விட அதிகமாகின்றது.

எனவே தான் நாம் இறை மறுப்பாளர்களுடன் விவாதம் நடத்தினோம். இறைவன் அருளால் அந்த விவாதத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதும் குர்ஆன் இறைவேதம் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும் விதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியளித்தான். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.



வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது


9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள் இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது?


பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும்.

9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ தந்தையோ கணவனோ மனைவியோ இல்லாமல் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் மட்டும் இருந்தால் எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர வேறு வாரிசுகள் இருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது.

இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் குழந்தைக்கு இரண்டு பங்கும் பெண் குழந்தைக்கு ஒரு பங்கும் உண்டு என குர்ஆன் கூறுகின்றது.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4 : 11)

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாகப்பிரிவினையில் மூன்று ஆண்கள் இருப்பதால் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் ஆண்களுக்கு ஆறு பங்குகள் உண்டு. இரண்டு பெண்கள் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கு என்ற அடிப்படையில் பெண்களுக்கு இரண்டு பங்குகள் உண்டு. ஆக மொத்தம் எட்டு பங்குகளாக சொத்து பிரிக்கப்பட வேண்டும்.

9600 சதுர அடியை எட்டு பங்குகளாக வைத்தால் ஒரு பங்கு என்பது 1200 சதுர அடியாகும். எனவே பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1200 சதுர அடி இடம் உண்டு. ஆண்களில் ஒவ்வொருவருக்கும் 2400 சதுர அடி இடம் உண்டு.

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?


பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  ?????



ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் காகிதத்தில் வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம்.

எனவே தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது


நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தை பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படி சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா?


இவரது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இவரது கேள்வியில் உள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு அறிவுறுத்தும் கடமை நமக்கு இருக்கிறது கேள்வியில் அடங்கியுள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு நாம் சுட்டிக்காட்டும் அவசியம் உள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம் மரியாதையும் இழந்து வேலை செய்யும் அவல நிலையிலும் பலர் உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும் பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் சுமக்கிறார்கள் என்பதை உணராமல் சில பெண்கள் துரோகச் செயலில் ஈடுபடுவதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களை பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் இதை மாற்றி அமைக்க முடியும்.

அரபுகளில் அதிகமானவர்கள் இன்னமும் அதே அறியாமைக் கால காட்டுமிராண்டிகளாகவே உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. பணத் திமிர் காரணமாக ஆட்டம் போடும் காட்டு அரபிகளால் இஸ்லாத்தின் மரியாதை குறைந்து வருகிறது. மனித உருவில் வாழும் மிருகங்களிடம் போய் அடிமை வேலை பார்க்க வேண்டுமா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்ததாக இந்திய அரசாங்கம் தான் இது போல் தனது குடி மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் அநியாயம் செய்கிறது என்றால் இலங்கை அரசும் இந்தியாவைப் போலவே தனது குடிமக்களைக் காக்கத் தவறி வருகிறது என்பது இவரது மடலில் இருந்து தெரிய வருகிறது.

இது போல் எந்த அரபியாவது ஒரு அமெரிக்கனிடம் நடக்க முடியுமா? அமெரிக்கனையோ அல்லது வேறு நாட்டவரையோ அரபி ஒருவன் செருப்பால் அடித்தால் அந்த அரபியை செருப்பால் திருப்பி அடித்து விட்டு அவன் அமெரிக்க தூதரகத்துக்குள் அல்லது தனது நாட்டு தூதரகத்துக்கு போய் விட்டால் அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை தூதரகங்களில் உள்ளவர்கள் சொரணையற்றவர்களாகவும் கடமை தவறியவர்களாகவும் உள்ளனர் என்பதற்கு இவரது நிலைமை ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

இனி இவரது கேள்விக்கு நாம் வருவோம்.

ஒரு மனிதன் உலகில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்யலாம். அப்படி பணி செய்து சம்பாதிப்பது ஹராமாக ஆகாது. ஆனால் உலக நாடுகள் வகுத்துக் கொண்ட சட்டப்படி அது குற்றமாகும்.

இந்தச் சட்டங்கள் மனிதர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களாக இருப்பதால் அதைப் பேணி நடப்பது தான் நமக்கு பாதுகாப்பானது. மங்களூர் விமான விபத்தில் பலர் பலியான சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பலியானவர்களில் சிலர் ஆள் மாறாட்டம் செய்து பயணித்ததால் அவர்களின் முடும்பத்தினருக்குக் கிடைக்க இருந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் கிடைக்கவில்லை.

அது போல் பணி செய்த இடத்தில் மரணித்து விட்டால் அந்த செய்தி கூட குடும்பத்துக்கு தெரிவிக்க வழியில்லாமல் போய் விடும். இன்னும் பல நன்மைகளை நாம் இழக்க நேரிடும். எனவே முறைப்படி அனுமதி இல்லாமல் வெளிநாடுகளில் பணி செய்வது நமக்குப் பல கேடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும் ???



இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர் ஆன் போதனைபடியும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைஒத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்

3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார். அபூ தர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள். அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.

நூல் புஹாரி 3861

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால் ???


நான் பத்து வருடங்களுக்கு முன் வாகனம் ஓட்டிச் செல்லும் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா?

வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

திருக்குர்ஆன் 2:286

மறதியாகவோ தவறுதலாகவோ செய்த காரியங்களுக்கு எங்களைத் தண்டித்து விடாதே என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவதால் நம்மை மீறி நடந்த காரியங்களுக்கு அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.

ஆனால் நாம் செய்யும் தவறுதலான காரியங்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பரிகாரம் செய்யும் கடமை நமக்கு உள்ளது. அதைச் செய்யத் தவறினால் அந்தக் குற்றம் நம்மைச் சேரும்.

உதாரணமாக நம் வாகனத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு அதனால் ஒருவர் இறந்து விட்டால் அவரைக் கொலை செய்த குற்றம் நமக்கு வராது. ஆனால் இறந்தவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அந்தக் கடமையில் இருந்து தவறினால் அந்தக் குற்றம் மட்டும் நம்மைச் சேரும். கொலைக் குற்றம் சேராது.

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப் பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:92

தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு அளிக்க வேண்டும். இன்றைய காலத்தில் அடிமைகள் இல்லாததால் அடிமைகளை விடுதலை செய்ய முடியாது. ஆனால் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கும் கடமை இருக்கிறது.

ஆனால் இதுவும் கூட இன்றைய காலத்தில் சமுதாயப் பொறுப்பாக உலகம் முழுவதும் ஆக்கப்பட்டு விட்டது. வாகனங்களை நாம் வாங்கும் போதே இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்காகவும் இன்ஷ்யூரன்ஸ் கட்டணம் நம்மிடமிருந்து பெறப்படுகிறது. இப்படி வாகனம் வாங்கும் அனைவரிடம் இருந்தும் பெறப்படும் தொகையில் இருந்து விபத்து நடக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

இதை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றன. நாம் விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடி விட்டாலும் அதற்கான நட்ட ஈடு பாதிக்கப்பட்டவருக்கோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கோ கிடைத்து விடக்கூடிய ஏற்பாடு உலக நாடுகள் அனைத்திலும் செய்யப்பட்டு விட்டது. நாம் செலுத்த வேண்டிய நட்ட ஈட்டை நம் சார்பில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி விடுவதால் நம் மீது எந்தக் குற்றமும் சேராது.

மேலும் விபத்து ஏற்படுத்தியவர் தப்பிச் செல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் வெறிகொண்ட பொது மக்களால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் அந்த இடத்தை விட்டு ஓடுவது கூட குற்றமாகாது. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய மனிதாபிமான கடமைகளை நாம் தவிர்க்கக் கூடாது.

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை


சூரிய கிரகணத்தை காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? பல இடங்களில் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் கிரகணம் தெரியவில்லை. அங்கு தொழ வேண்டுமா அல்லது காண முடியாததால் தொழக் கூடாதா ?


இது குறித்து பிறை ஓர் விளக்கம் எனும் நூலில் நாம் விளக்கியதையே பதிலாகத் தருகிறோம்

கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.

கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?

இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?

லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.

கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கு அவர்களது மனோ இச்சைப் படி என்ன தான் பதில் கூறினாலும் கிரகணம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இதற்கு இவர்கள் அளிக்கும் மறுப்பு வேடிக்கையாக உள்ளது.

கிரகணத்தைப் பிறையோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் கிரகணம் ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் பிறை உள்ளே இருக்கிறது என்று தான் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே கிரகணத்தை ஆதாரமாகக் காட்டி பிறையையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று இவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது. கிரகணம் ஏற்படும் போது தான் தலைப்பிறை என்று நாம் கூறவில்லை. மாறாக ஒரு பகுதியில் தெரிந்த சந்திர கிரகணம் மற்ற பகுதியில் ஏன் தாமதமாக ஏற்படுகிறது என்ற காரணத்தையே சிந்திக்கச் சொல்கிறோம். இந்தக் காரணம் தலைப் பிறைக்கும் பொருந்தும் என்பது தான் நமது வாதம்.

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா



சலஃபிகள் இஸ்லாமிய அரசை விமர்சிக்கக் கூடாது என்ற நிலைபாட்டில் உள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

70 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلَاهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ وَهَذَا حَدِيثُ أَبِي بَكْرٍ قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلَاةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلَاةُ قَبْلَ الْخُطْبَةِ فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ رواه مسلم

முதன் முதலிலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, "சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்'' என்று கூறினார். அதற்கு மர்வான் "முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டு விட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை)'' என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி) அவர்கள், "இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றி விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்: உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப்
நூல் : முஸ்லிம் (78)

4138 أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ رواه النسائي

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்த அறப்போர் சிறந்தது? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது எனப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : நஸாயீ (4138)

யார் என்ன சொன்னாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு அஞ்சக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது.

7199 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ أَخْبَرَنِي أَبِي عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ وَأَنْ نَقُومَ أَوْ نَقُولَ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ رواه البخاري

நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் "உண்மையையே கடைப்பிடிப்போம்' அல்லது "உண்மையே பேசுவோம்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல் : புகாரி (7200)

10594 حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ هَيْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ فِي حَقٍّ إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ أَوْ سَمِعَهُ قَالَ وَقَالَ أَبُو سَعِيدٍ وَدِدْتُ أَنِّي لَمْ أَسْمَعْهُ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் சத்தியத்தைக் கண்டால் அல்லது அதைச் செவியுற்றால் மக்களின் பயம் அதைக் கூறவிடாமல் அவரைத் தடுக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி)
நூல் : அஹ்மது (10594)

இன்றைக்கு அநேகமான இஸ்லாமிய நாடுகளில் உண்மையான இஸ்லாம் இல்லை. அந்நாடுகளை ஆழ்பவர்கள் பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்றனர். இந்த ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டித்து பேசினால் தான் இவர்கள் தங்களுடைய தவறுகளை உணரும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஆட்சியாளர்களைப் பற்றிய சரியான கணிப்பீடும் மக்களிடம் ஏற்படும்.

அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் இந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய தவறுகளை உணர மாட்டார்கள். அதிலிருந்து திருந்த மாட்டார்கள்.

இஸ்லாமிய நாட்டை ஆள்பவர் இணை வைக்காத முஸ்லிமாக இருந்தால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதைச் சிலர் காரணமாகக் கூறுகின்றனர்.

2955 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (2955)

ஆட்சியாளருக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் அவர் செய்யும் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நிர்வாக ரீதியில் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் அரசர் இடும் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

அரசருடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அதை விமர்சனம் செய்வதும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற கட்டளைக்கு முரணான செயல் அல்ல. மாறாக ஒருவர் அரசருக்குக் கட்டுப்பட்ட நிலையில் அவருடைய தவறுகளை விமர்சனம் செய்யலாம். இவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்.

அதே நேரத்தில் ஆயுதம் தாங்கி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதையும் மறந்து விடக்கூடாது

குளிப்பது எப்போது கடமையாகும்

குளிப்பது எப்போது கடமையாகும்



விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டுமா? அல்லது இச்சை நீர் வெளிப்பட்டாலே குளிப்பது கடமையா


ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ - இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர விந்து அல்ல. மதீ எனப்படும் இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது. மாறாக உளூ முறிந்துவிடும். இது வெளிப்பட்டால் உறுப்பை கழுவிவிட்டு உளூச் செய்து கொள்ள வேண்டும்.

அதிக அளவில் "மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். "அதற்காக உளூச் செய்ய வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரீ (132), முஸ்லிம் (458)

"ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

எனவே விந்து வெளிப்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமையாகும். இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?


கோயில் நிலம் விலைக்கு வந்தால் அதை நாம் வாங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் வியாபாரமாகவே இது உள்ளது. இந்த நிலத்தை விலைக்கு வாங்குவதால் மார்க்க சட்ட திட்டங்களை புறக்கணிக்கும் நிலை இல்லை. எனவே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வியாபாரம் அதன் உரிமையாளர்களால் முறைப்படி செய்யப்பட வேண்டும். நிர்வாகியாக இருப்பவர் கள்ளத்தனமாக விற்பனைச் செய்து அதைச் சுருட்ட நினைத்தால் அந்த வியாபாரம் மார்க்கத்தில் கூடாது. அது போல் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்தை பத்தாயிரத்துக்கு வாங்குவதற்காக அதன் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கினால் அது குற்றமாகும். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு கூறப்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தினால் மட்டும் வாங்கலாம்

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.

الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ(3)24

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் (24 : 3)

ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.

ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.

விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.

الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُوْلَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ(26)24

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் (24 : 26)

மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

1755حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ لَا تَنْكِحْهَا رواه أبو داود

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் (1755)

ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.

அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர்.

இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும்.

எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது.

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் உண்டா

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் உண்டா


நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?


நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : திர்மிதீ (559)

நகைக்கு ஸகாத் கொடுத்து விட்டால் அந்த செல்வத்துக்குரிய கடமை நிறைவேறி விடுகின்றது. இதன் பிறகு அந்த நகையை விற்று வேறு பொருள் வாங்கினால் பொருள் மாறுபட்டாலும் செல்வம் என்ற அடிப்படையில் இதற்குரிய கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்போது அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப்பணத்தில் இருந்து வீடோ வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை.

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா ??

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா ??


அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள்.

காசிம் என்று மகனைப் பெற்றவர்கள் இப்பெயரை புணைப் பெயராகச் சூட்டிக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தையாகப் பிறக்கும் போது யாருக்கும் பிள்ளை இருக்க மாட்டார்கள். எனவே காசிமின் தந்தை என்பது போல் பெயர் வைப்பது பொருளற்றதாகும். ஆனால் தடுக்கப்பட்டதாக ஆகாது. அபூ பக்ர், அபூ தாலிப் அபூ தல்ஹா, அபூ மூஸா என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. பக்ரின் தந்தை, தாலிபின் தந்தை, தல்ஹாவின் தந்தை, மூஸாவின் தந்தை என்றெல்லாம் பெயர் வைப்பது அர்த்தமற்றதாகும். எந்தக் குழாந்தையும் யாருக்கும் தந்தையாக இருக்க முடியாது. இது போன்ற பெயர்கள் ஒருவர் தந்தையாக ஆன பிறகு சூட்டிக் கொள்ள வேண்டிய செல்லப் பெயர்களாகும்.

ஆனாலும் பொருளைக் கவனத்தில் கொள்ளாமல் அபூபக்ர் போல் அபுல் காசிம் எனும் நபிகள் நாயகம் போல் நல்லடியாராக ஆகட்டும் என்ற கருத்தில் இப்பெயர்களை எடுத்துக் கொண்டால் அப்போது பொருளற்றதாக ஆகாது.

ஆனால் அபுல் காசிம் என்ற பெயரை யாரும் சூட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்ததாக சில ஹதீஸ்கள் உள்ளன. அது பொதுவான தடை அல்ல. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உயிருடன் வாழும் போது அவ்வாறு சூட்டக்கூடாது என்பதற்காகவே அந்தத் தடை விதிக்கப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தனர். சிலர் நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தனர். இதன் காரணமாக தனது குறிப்புப் பெயரான அபுல் காசிம் என்பதை மற்றவர்கள் சூட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.

ஓருவர் அபுல்காசிமே என்று பகீஃ என்ற இடத்தில் இருந்த ஓரு மனிதரை அழைத்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை நாடவில்லை. இந்த நபரைத் தான் அழைத்தேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். எனது குறிப்புப் பெயரை சூட்டாதீர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புஹாரி 2120, 2121, 3537
அறிவிப்பாளர் : அனஸ்

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்முடன் இல்லாத காரணத்தால் இந்தத் தடை இந்த காலத்திற்குப் பொருந்தாது. எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொண்டால் அது தவறல்ல

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??

சில தொழுகைகளில் சப்தமில்லாமல் ஓதுவது??



சில ரக் அத்களில் சப்தமாகவும் சில ரக் அத்களில் சப்தமில்லாமலும் ஓதி இமாம் தொழுவிப்பது ஏன்


ஃபஜர் தொழுகையிலும் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமின்றி ஓதி தொழ வைப்பார்.

இவ்வாறு சில தொழுகையில் சப்தமிட்டும் சில தொழுகையில் சப்தமின்றியும் ஓதுவதற்கு குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காரணம் சொல்லப்படவில்லை. பொதுவாக வணக்கம் தொடர்பான காரியங்களில் காரணங்கள் கூற முடியாது. மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்தவாறு அவற்றை அப்படியே செய்வதே நமது கடமை.

சிலர் தங்களுடைய சுய சிந்தனையைப் பயன்படுத்தி இவற்றுக்கு பலவிதமான காரணங்களைக் கூற முயலுகின்றனர். இவர்கள் அளிக்கும் விளக்கம் எதுவும் ஏற்புடையதல்ல.



இந்த வீடியோவையும் பார்க்கவும்
(http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/sabthamakavum_sabthamillamalum_othuthal/)

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா



இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே?


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள். நம்புவார்கள்.

ஆனால் முழுமையான மார்க்கம் என்று நாம் நம்பினால் மட்டும் அது முழுமையான மார்க்கமாக ஆகாது. மாறாக அது முழுமையானது என்பதற்கான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மார்க்கம் ஒரு காலத்தில் பொருந்தி பின்னர் பொருந்தாமல் போனால் அது முழுமை பெற்ற மார்க்கம் எனக் கூற முடியாது. இஸ்லாத்தைப் பொருத்த வரை அதன் கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ இன்றைக்கோ அல்லது இதற்கு முன்னரோ இதற்குப் பின்னரோ பொருந்தாமல் உள்ளது என்று ஆதாரத்துடன் கூற முடியாது. ஆனால் மற்ற மதங்களின் சட்ட திட்டங்களில் ஏராளமானவை அந்த மதத்தின் உறுப்பினர்களால் மாற்றப்படுகின்றனர். காலத்திற்கு ஒவ்வாதவை எனக் கூறி தூக்கி வீசப்படுகின்றன. எனவே மற்ற மதங்களை முழுமையானவை எனக் கூற முடியாது.

ஒரு மதம் முழுமையான மதம் என்றால் அந்த மதத்தைப் பின்பற்றுவோர் சந்திக்கும் எல்லா பிரச்சனைகள் பற்றியும் அந்த மதத்தில் தீர்வு இருக்க வேண்டும். எதைப் பற்றியும் அந்த மதம் ஒரு கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் வெறும் கடவுள் வழிபாட்டை மட்டும் பேசி விட்டு வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அரசியல் நவீன கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்து ஒரு மதம் மவுனம் சாதித்தால் அதை முழுமையான மார்க்கம் எனக் கூற முடியாது.

இஸ்லாத்தில் நோ கமாண்ட்ஸ் என்று சொல்லும் நிலை ஏற்படவே செய்யாது, எதைப் பற்றி கேட்டாலும் அது கூடும் என்றோ கூடாது என்றோ இஸ்லாத்துக்கு கருத்து இருக்கும். மற்ற மதங்களில் இதை காண முடியாது.

மேலும் முழுமை பெற்ற மார்க்கம் என்றால் மனித குலத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே ஆன்மிக நம்பிக்கைகள் மட்டும் உள்ள மதம் முழுமை பெற்ற மதமாக ஆக முடியாது. மாறாக மனித குலத்துக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களும் அதில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

சொர்க்கம் நரகம் போன்ற நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இஸ்லாம் பேசுவதுடன் இந்த உலகத்தில் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் சட்டத்திட்டங்களையும் கற்றுத் தருகின்றது.

உதாரணமாக ஒரு மனிதன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும்? எவ்வாறு குடும்பம் நடத்த வேண்டும்? குடும்பத்தில் கணவன் ஆற்ற வேண்டிய கடமை. மனைவி ஆற்ற வேண்டிய கடமை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? அண்டைவீட்டாருடன் நடந்து கொள்ள வேண்டிய முறை? சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமை? இப்படி ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் வாழ்வில் சந்தக்கின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வாறு அறிவார்ந்த முறையில் எதிர்கொள்வது? என்பதை இஸ்லாம் மனித குலத்துக்கு வழிகாட்டுகிறது.

இஸ்லாம் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் இது போன்ற அற்புதமான வழிகாட்டல்கள் வாழ்க்கை நெறி முறைகள் மற்ற மதங்களில் இல்லை. இந்த வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் இஸ்லாம் மட்டுமே முழுமை பெற்ற மார்க்கம் என்று கூற முடியும்.

முழுமையான மார்க்கம் என்றால் அதில் யாரும் எதனையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாத நிலையில் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஒரு மதத்தில் சேர்க்க முடியும் என்றால் அது எப்படி முழுமையாக இருக்க முடியும்? முழுமையாக இல்லாத காரணத்தால் தானே அதில் மற்றவர்கள் தமது கருத்தைச் சேர்க்க முடிகிறது!

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன் ?


நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன் ?



ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5133)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் ஸல் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

(அல்குர்ஆன் 4:19)

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி),
நூல்: புகாரி 5139, 6945, 6969

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.

(அல்குர்ஆன்4:21)

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.

மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?



சுப்ஹு தொழுகையில் இமாமுடன் தொழும் போது இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளைத் தூக்காமல் நிற்கலாமா?

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு நபிவழிகளில் ஆதாரமில்லை. இச்செயல் பித்அத் ஆகும்.

இக்காரியத்தில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றி தொழுதால் அவர் குனூத் ஓதும் போது நாம் மௌனமாக நிற்கும் நிலை ஏற்படும். இதனால் தொழுகையில் தேவையில்லாத ஒரு காரியத்தைச் செய்யும் நிலை ஏற்படுகின்றது.

அத்துடன் அத்தொழுகையில் கலந்து கொண்டு மௌனமாக இருப்பதால் இந்த அனாச்சாரத்தை ஆதரிக்கும் நிலையும் உருவாகின்றது. மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் சபைகளில் ஒன்றாக இது ஆகி விடுகின்றது. தீமையைக் கண்டால் குறைந்த பட்சம் மனதால் வெறுத்து ஓதுங்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70

எனவே தொழுகையில் இமாம் ஒரு பித்அத்தான காரியத்தைச் செய்து பின்னால் உள்ளவர்களும் அந்த பித்அத்தில் பங்குகொள்ளும் நிலை ஏற்பட்டால் இவரைப் பின்பற்றித் தொழக் கூடாது. மாறாக தனியாகவோ அல்லது தனி ஜமாஅத்தாகவோ தொழுது கொள்ள வேண்டும்



சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா


சிலர் "துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்" என்கிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா?

பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.

இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.

மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.

1266حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود (3399 ترمذي)

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)
நூல் : அபூதாவுத் (1266) திர்மிதீ (3399)

தொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவங்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வை போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. இது போன்று வெறுமனே பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.

ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹவைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் அது துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக மார்க்கம் கூறவில்லை.

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ?


சிலர் எழுத்து, பேச்சுகளை முடிக்கும் போதும் "ஜஸாகல்லாஹூ கைர்" என்கிறார்களே. அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா?


ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : திர்மிதீ (1958)

25108 فَمَرَّ الْأَعْرَابِيُّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ فَقَالَ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَوْفَيْتَ وَأَطْيَبْتَ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكَ خِيَارُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُوفُونَ الْمُطِيبُونَ رواه أحمد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்த கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மது (25108)

பேச்சை முடிக்கும் போதும் எழுத்தை முடிக்கும் போதும் இதை கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. மாறாக பிறருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தப்பங்களில் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?



இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.

எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.

பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது. இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2) ளالمائدة : 2ன5

மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் (5 : 2)

இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) ளالمائدة : 8ன5



நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (5 : 8(

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) ளالممتحنة : 8ன60

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் (60 : 8(

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முஸ்லிமுக்கும் மாற்றுக் கொள்கையில் உள்ள ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது நபியவர்கள் தன் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் முஸ்லிமுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கவில்லை. மாறாக நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.

3415 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ عَنْ اللَّيْثِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ فَقَالَ لَا وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ فَسَمِعَهُ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَامَ فَلَطَمَ وَجْهَهُ وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ فَقَالَ أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا فَمَا بَالُ فُلَانٍ لَطَمَ وَجْهِي فَقَالَ لِمَ لَطَمْتَ وَجْهَهُ فَذَكَرَهُ فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ فَلَا أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى رواه البخاري

யூதர் ஒருவர் (சந்தையில்) தன் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார். உடனே அந்த யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் நடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கினார். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களீல் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். "அவர்கள் "தூர்சினாய்' மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின் போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப் (பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப் பட்டு விட்டாரா?' என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி(

நூல் ; புகாரி (3414(

மேற்கண்ட சம்பவத்தில் முஸ்லிம் மூசா நபியை விட தன்னை சிறப்பித்துப் பேசியதால் அவர் செய்ததை நபியவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக தனது கோபத்தை வெளிப்படுத்தி அவர் நடந்துகொண்ட விதத்தைக் கண்டிக்கின்றார்கள்.

நபிமார்களில் ஒருவரை விட மற்றவரை சிறந்தவர் என்று கூறுவது கூடாது. இந்தத் தவறை முஸ்லிமும் செய்துள்ளார். யூதரும் செய்துள்ளார். எனவே நபியவர்கள் அவ்விருவர் செய்ததையும் கண்டிக்கும் வகையில் உபதேசம் செய்கிறார்கள்.

ஒரு முஸ்லிமுக்கும் யூதருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் தன் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பையே அளித்தார்கள்.

2417حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ فَقَالَ الْأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ لَا قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ احْلِفْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا إِلَى آخِرِ الْآيَةِ رواه البخاري

"ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, "(அப்படியென்றால் "நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!'' என்று கூறினேன். உடனே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்., "எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது' (3:77)

புகாரி (2417(

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம். அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம். அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம். இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை. உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள். நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது. ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது

ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும். அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.

ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது. அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.

அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானும்மு இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால் அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான். அந்த அடிப்படையில் பாகிஸ்தான் ந்மது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்.