பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, June 4, 2026

நபி (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா⁉️

நபி (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா⁉️

நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என்மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். (திர்மிதீ:3468)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என்மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான். (திர்மிதீ:3469)

மேலுள்ள இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமானவை என சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவெடுக்காமல் விரிவாக இதை ஆராய வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றுக்கு முரண்படாத வகையில்தான் இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

தமது பெயரை உச்சரிக்கும் வகையில் எத்தனையோ வாசகங்களை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை நாம் கூறும்போது ஸலவாத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. ஸகாத் வழங்குவது.
4. ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.
(புகாரி:08)

ஒருவர் முஸ்லிமாக வேண்டுமென்றால் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று மொழிவது கட்டாயம் என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது. இந்தக் கலிமாவை கற்றுக் கொடுத்த நபியவர்கள் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கும் போது ஸலவாத்தைச் சேர்க்காமல் கூறுவதையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் எல்லா தருணங்களிலும் தம் மீது ஸலவாத்துக் கூறுவது அவசியம் என்றால் அதை இங்கே நபியவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் கலிமா மொழியும் போதும், மற்றவருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுக்கும் போதும் அன்ன முஹம்மதன் என்று தான் கூறுகிறோம். அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதில்லை.

பாங்கு முடிந்த பிறகு நபியவர்களுக்காக நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனையில் முஹம்மது என்ற பெயரை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே ஸலவாத்தைச் சேர்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாங்கைக் கேட்கும் போது “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா ”என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

துஆவின் பொருள்:
(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (நபி) அவர்களுக்கு உரித்தான உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக) (புகாரி:614)

இந்த துஆவில் ஆ(த்)தி முஹம்மதன் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஆ(த்)தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் வானவர்கள் வருவார்கள். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என அவர் வானவர்களிடம் சாட்சியம் கூறுவார். “எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) என இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். (புகாரி:1369)

கப்ரில் விசாரிக்கப்படும் போது நல்லடியார் அன்ன முஹம்மதன் என்று கூறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும் நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் போதும், அதைச் செவியுறும் போதும் அவர்களின் மீது ஸலவாத்து கூற வேண்டும் என்ற நடைமுறை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் இருக்குமேயானால் இதை நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், “நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்” என்று பாடலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் உன் பரக்கத் எனும் அருளைக் கொடு” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.
(புகாரி:2835)

பாயவூ முஹம்மதன் என்று மட்டுமே நபித்தோழர்கள் நபியவர்கள் முன்னிலையில் பாடியுள்ளனர். பாயவூ முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பாடவில்லை. நபியவர்களும் அதைத் திருத்திக் கொடுக்கவில்லை. நபியவர்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட நபித்தோழர் அபூபக்ர் அவர்கள் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடுகையில் ஸலவாத்துக் கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “உங்களில் யார் முஹம்மது அவர்களை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (03:144) என்றார்கள். (புகாரி:1242)

யாரேனும் முஹம்மதை வணங்கினால், என்று தான் அபூபக்ர் (ரலி) கூறினார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை வணங்கினால் என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது ஸலவாத்துக் கூறவில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்? எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது “முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)” என்று கூறினேன். (புகாரி:5228)

முஹம்மதின் இறைவன் என்று தான் ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவன் என்று கூறவில்லை.

நபியவர்கள் காலத்தில் அவர்களின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருக்கவில்லை. இதை நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கவில்லை என்பதற்கு மேலுள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இதற்கு உள்ளன.

நபிமொழிகளை மொழிபெயர்க்கையில் நபியவர்களின் பெயர் வரும் போது (ஸல்) என்று மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வாசகம் அசலில் உள்ளதல்ல. நபி என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும், முஹம்மது என்றும் மட்டுமே ஹதீஸ்களின் மூலத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் தாமாக (ஸல்) என்று சேர்த்து இது கட்டாயக் கடமை போல் ஆக்கி விட்டார்கள்.

நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது (ஸல்) என்று கூறும் வழக்கம் அண்மைக் காலத்தில் தான் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு எழுத வேண்டும் என்றோ, கூற வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை.

அப்படியானால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி நினைவூட்டப்பட்டால் அவர்கள் மீது ஸலாவத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் முன்பு நாம் எடுத்துக்காட்டிய இரு ஹதீஸ்களின் சரியான விளக்கம் எது என்ற கேள்வி எழுகிறது.

நபிகளின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அர்த்தமில்லை. மாறாக எந்த இடத்தில் ஸலவாத் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளார்களோ அந்த இடத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது ஸலவாத் கூற வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாக இருக்க முடியும்.

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அதை நாம் செயல்படுத்தியும் வருகிறோம். இது ஸலவாத் கூறும் இடங்களில் ஒன்றாகும்.

அது போல் பாங்கு சொல்லி முடித்த பின் ஸலவாத் கூறுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா’வைக் கேளுங்கள். “வஸீலா" என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும். (முஸ்லிம்:628)

பாங்கு கூறுபவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்ற வாசகத்தை பாங்கில் கூறுவார். இவ்வாறு அவர் கூறும் போது நபியவர்களின் பெயரைக் கூறுவதால் அங்கே ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. பாங்கைச் செவியுறுபவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்கும் போது நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக முஅத்தின் கூறுவதைப் போன்றே பாங்கைச் செவுயுறுபவரும் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். பாங்கு சொல்லி முடித்த பின்னர் ஸலவாத் கூற வேண்டும்.

நபிமார்களின் பெயரைக் கூறும் போது அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதும்,
நபித்தோழர்களின் பெயரைக் கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று கூறுவதும், மற்றவர்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுவதும் இது போன்றதாகும்.

அதாவது பிரார்த்தனை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறினால் தவறல்ல. இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் கட்டாயம் என்று கூறக் கூடாது.

ஒரு சபையில் நபி (ஸல்) அவர்கள் குறித்து பேசப்பட்டால் ஆயிரம் முறை பேசப்பட்டாலும் சபை முடிவில் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆவை ஓதினால் அது போதுமானது.

ஒரு சபையில் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டால் ஒரு தடவை ஸலவாத் கூறினால் போதுமானது என்பதைப் பின் வரும் ஹதீஸ்கள் தெளிவாகவும் குறிப்பிடுகின்றன.
 
ஒரு கூட்டத்தினர் ஒரு சபையில் அமர்ந்து அதை விட்டுப் பிரிவதற்கு முன் அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமாலும் இருந்தால் அவர்கள் சொர்க்கம் சென்றாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம்,அஹ்மத்)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Friday, May 1, 2026

பள்ளிவாசலில் விற்பதும், வாங்குவதும் கூடுமா⁉️


பள்ளிவாசலில் விற்பதும், வாங்குவதும் கூடுமா⁉️

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும், வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நூல் : திர்மிதி 296

பள்ளிவாசலில் சப்தமிட்டு காணாமல் போன பொருளை ஒருவன் தேடுவதைக் கண்டால் அல்லாஹ் அதை உனக்கு திரும்பக் கிடைக்காமல் செய்யட்டும் என்று கூறுங்கள். ஏனெனில் பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்:568)

பள்ளிவாசலில் விற்பது, வாங்குவது வெளியே காணாமல் போன பொருள் பற்றி பள்ளிவாசலுக்குள் விசாரிப்பது ஆகியவற்றைச் செய்யக் கூடாது என்றும் பள்ளிவாசல் இதற்காகக் கட்டப்படவில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் காரணத்துடன் இதைத் தடை செய்து விட்டார்கள். இதை மீறுவது பள்ளிவாசல் கட்டப்பட்ட நோக்கத்துக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மஸ்ஜித் (பள்ளிவாசல்) என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொழுகை நடத்துவதற்காக நாம் ஒதுக்கிக் கொண்ட இடம் தான் பள்ளிவாசலாகும். பள்ளிவாசல் என்பதன் நேரடிப் பொருள் இதுதான்.
ஆனால் தொழுகை தவிர வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்காகவும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை ஒதுக்கி இருப்போம். அவை பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது.

ஆனாலும், அந்த இடங்களும் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின் வரும் ஆதாரங்களில் இருந்து அறியலாம். 

ஸஅது (ரலி) அவர்கள் அகழ்ப்போரின் போது தாக்குதலுக்கு உள்ளானார். அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அவருக்கு ஒரு கூடாரம் அமைத்தார்கள். (புகாரி: 463)

ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். (நீண்ட சம்பவம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. (புகாரி: 439) 

நாங்கள் நபியவர்களுடன் இருக்கும்போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார். (புகாரி: 63)

அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். (புகாரி: 454)

விபச்சாரம் செய்த யூத ஆணும், யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாஸா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். (புகாரி: 1329) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூணில் கட்டி வைத்தனர். (புகாரி: 469)

பள்ளிவாசல் என்று இந்த ஹதீஸ்களில் கூறப்பட்ட இடங்கள் தொழுவதற்கான இடமல்ல. மாறாக பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும். இதனால் தான் தொழுகையல்லாத மற்ற காரியங்கள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன.

நமது காலத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கே சென்று மலஜலம் கழிப்பதால் பள்ளிவாசலை அசுத்தமாக்கி விட்டதாகச் சொல்ல மாட்டோம். பள்ளிவாசல் வளாகத்தில் இமாம்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்தாலும் அவை பள்ளிவாசல் அல்ல.

எனவே தொழுவதற்காக ஒதுக்கப்பட்ட புனிதமான இடம் தவிர மற்ற இடங்கள் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பள்ளிவாசலின் சட்டங்கள் கிடையாது. அது போல் பள்ளிவாசலாக ஆக்கப்படாத வளாகத்துக்குள் விற்பது, வாங்குவது ஆகியவை பள்ளிவாசலில் விற்பதாக ஆகாது.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து வியாபாரம் செய்துள்ளனர். பின்வரும் ஹதீஸில் இதைக் காணலாம்.
 
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்!என்றேன். என்ன விஷயம்? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!என்றேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டினார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், சரி என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புகாரி: 2097)

பள்ளிவாசலில் வியாபாரம் செய்யலாம் என்பதற்கு இதை ஆதாரமாக காட்டக் கூடாது. தங்கத்தை எடை போட்டுக் கொடுத்தது தொழுவதற்கான இடத்தில் அல்ல. அரசு கஜானாவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தான்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

Saturday, September 27, 2025

நோன்பை_விட்டவருக்குப்_பரிகாரம்_உண்டா

#நோன்பை_விட்டவருக்குப்_பரிகாரம்_உண்டா?

شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًۭى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍۢ فَعِدَّةٌۭ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ⭘ 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கு அல்லாஹ் எளிதையே நாடுகிறான். உங்களுக்கு அவன் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற்கும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்துவதற்காகவும் (இச்சலுகையை வழங்கினான்.)

அல் குர்ஆன் -   2 : 185

நோன்பு நோற்பதற்குச் சக்தியுள்ளவர் அதை விட்டுவிட்டால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முதலில் சட்டம் இருந்தது. பின்னர் சக்தியுள்ளவர் கண்டிப்பாக நோன்பு நோற்றே ஆகவேண்டும் என அச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது. இதனைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
“அதற்குச் சக்தி பெற்றவர்கள் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” எனும் (2:184) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் “உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற (2:185) வசனம் அருளப் பெற்றது.

அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி), நூல்கள்: புகாரி(4507), முஸ்லிம்(2104)

2:185 வசனத்தின்படி சக்தியுள்ளவர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க வேண்டும் என்ற சட்டம் பெறப்படுகிறது.
யாரையும் அவருடைய சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் நிர்ப்பந்திக்க மாட்டான் (அல்குர்ஆன் 2:286) என்ற வசனத்தின்படி அறவே நோன்பு நோற்க முடியாத நிரந்தர நோயாளிகள், முதியவர்கள் ஆகியோர் நோன்பை விடுவதால் எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

அப்துல்_காதிர்_ஜீலானி_குதுபுல்_அக்தாபா

#அப்துல்_காதிர்_ஜீலானி_குதுபுல்_அக்தாபா?

#குர்ஆனை_மறுக்கும்_ஆலிம்கள்

வானம் பூமியின் அச்சாணி

கவிதையின் முதல் அடி

يا قـطب أهل السما والأرض غوثهما

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே! என்று துவங்குகிறது. இதிலிருந்து தான் இக்கவிதையையே யா குத்பா’ குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் (வானவர்கள்) என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! என்பது பொருளாகிறது. வானவர் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) மீக்காயில் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் அல்லவா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில் நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா? இதுவல்ல அதன் பொருள் என்றால் அதற்கு என்ன தான் பொருள்? சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருவார்களா?

மகத்தான ரட்சகர்

يا غــوث الأعظم كل الدهر والحين

எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

என்பது யாகுத்பாவின் மற்றொரு வரியாகும். எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூவி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது? மிகப் பெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஈசா (அலை) அவர்கள் தமது சமூகத்தவரின் குற்றங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது,

‘மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும்,

என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?’ என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்’ என்று அவர் பதிலளிப்பார். ‘நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.’.’அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (எனவும் அவர் கூறுவார்)

(அல்குர்ஆன்: 5:116, 117, 118)

எனத் திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராயிருப்பினும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் யாருக்கும் எதுவும் செய்து விடவோ, காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

இன்றளவும் உயிருடன் உள்ள தீர்க்கதரிசியின் நிலையே இதுவென்றால் அவர்களை விடத் தரத்தால் பலமடங்கு குறைந்த ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பிறரது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன்’ என்றும் கூறுவீராக
(அல்குர்ஆன்: 72:21, 22)

‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக்
கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:13,14)

என்பன போன்ற திருவசனங்கள் இறைவனல்லாத எவராக இருப்பினும், அவர்கள் வாழ்வு, சாவு முதல் அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்த விதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும், மறைவானவற்றை அறிந்திட எவராலும் இயலாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

‘எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே’ என்று மரணித்தவரை அழைத்திட எவ்வாறு ஒரு முஸ்லிம் மனந்துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும் அவ்வாறு பிரார்த்திக்கப்படுபவர் நபியாக ஆனாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்களும் இறைவனின் அடிமைகளே. ஒருக்காலும் அவர்கள் இரட்சகராக முடியவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தாலேயே ‘எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே’ என்று இந்தக் கவிஞனும், இவனது அபிமானிகளும் அழைக்கத் துணிந்து விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்: 7:194)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன்: 7:197)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால்’அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:38)

திருக்குர்ஆனின் இந்த வசனங்களையும், இது போன்ற கருத்தில் வருகின்ற ஏராளமான வசனங்களையும் மீண்டும் ஒரு முறை கவனியுங்கள்! இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாறாக யாகுத்பா’வின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

‘எவராக இருந்தாலும் அவரும் அல்லாஹ்வின் அடிமையே. அணுவத்தனையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கே கூட சுயமாக அவர்களால் உதவிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை’ என்ற போதனைகளையும் ‘எல்லாக் காலங்களிலும் மகத்தான இரட்சகரே’ என்ற இந்தப் புலம்பலையும் ஒரு நேரத்தில் ஒருவன் எப்படி நம்ப முடியும்?

இந்த வரியை நம்பினால் அவன் இறை வசனங்களை மறுக்கிறான். இறை வசனங்களை நம்பினால் அவன் இந்த யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

மகத்தான இரட்சகரே’ என்று அழைப்பது ஒரு புறமிருக்கட்டும். சாதாரணமாக அவரது பெயரைச் சொல்லியாவது அழைக்கலாம்? என்றால் அதற்கும் கூட திருக்குர்ஆன் அனுமதி தரவில்லை.

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பெரியார். அவர் மரணித்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து கொண்டு அழைத்தால் அதை அவரால் செவியுறவே முடியாது.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:22)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20,21)

இறைவனின் இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகும் என்றோ மரணித்து விட்ட அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் கூப்பாடுகளைக் கேட்பார்கள் என்று நம்புவது இந்த வசனங்களை மறுத்ததாக ஆகாதா?

அப்துல்_காதிர்_ஜீலானியை_அல்லாஹ்வுக்கு_சமமாக்கும்_சாபத்திற்குரிய_மவ்லித்_வரிகள்

#அப்துல்_காதிர்_ஜீலானியை_அல்லாஹ்வுக்கு_சமமாக்கும்_சாபத்திற்குரிய_மவ்லித்_வரிகள்

لولاه لا افلاح *للجن والابشار
 இவர் இல்லை என்றால் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் எந்த வெற்றியும் கிடையாது.

இவர் பிறப்பதற்கு முன் எத்தனையோ நபிமார்கள், அவர்கள் வழி நின்ற மூஃமின்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர் மரணித்த பின்பும் எத்தனையோ நன்மக்கள் உலகில் தோன்றியுள்ளனர். இவரைப் பற்றி அறிந்திராத இவரது போதனைகளைப் படித்திராத எத்தனையோ மக்கள் நல்வழியில் செல்கின்றனர். இந்த உண்மைகளை உணராமல் இவரால் தான் மனித இனமும் ஜின்கள் இனமும் வெற்றியடைய முடியும் என்கிறான் மவ்லிதை எழுதிய வழிகேடன்.

இதன் மூலம் எல்லா நபிமார்களையும் நபித்தோழர்களையும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துகிறான்.

முஹ்யித்தீன்_மவ்லித்_ஓதுவோரின்_பித்தலாட்டங்கள்

#முஹ்யித்தீன்_மவ்லித்_ஓதுவோரின்_பித்தலாட்டங்கள்

நான் தீர்ப்பளித்து விடுவேன். பிறரது உரிமையை ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதியை வழங்குகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்குகளைக் கொண்டு வர முடியும். அவர்களைத் தமது வாதத் திறமையால் ஏமாற்றி தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று விட முடியும். ஆனால் மறுமையில் நரக நெருப்பை அடைவார் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற காரணத்துக்காக செய்த பாவம் அனைத்துக்கும் மன்னிப்பை நபித் தோழர்கள் பெறவில்லை. பெறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் போது இவர் நரகிலிருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் சென்று தேடிப்பார்த்த போது அவர் மோசடி செய்த ஒரு ஆடையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 3074

கைபர் போல் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உடனே மக்களின் முகங்கள் மாறுதலடைந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்து விட்டார் என்றார்கள். அவரது பொருட்களை மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் பெறுமதியில்லாத ஒரு மாலையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933,

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குriயவராக இருந்துள்ளார். மற்றொருவர் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல் மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான் மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு இத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 17

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள்

17. ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!

 

انت غوث الثقلين *انت زين الحرمين

ومنير الملوين *اجعلنا مقبلينا

ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்களே! மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர் நீங்களே! வானம், பூமிகளைப் பிரகாசிக்கச் செய்பவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்!

முட்டாள்தனமான இந்த வரிகளைக் கண்ட பின்பும் யாரேனும் இதை ஆதரிக்க முடியுமா? மனித இனத்தை மட்டுமின்றி ஜின்களையும் இவர் தாம் இரட்சிப்பாராம்! வானம் பூமியை இவர் தாம் பிரகாசிக்கச் செய்கிறாராம்! இது நாம் மேலே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

 

انت اتقى الاتقياء *انت اصفى الاصفياء

صرت تاج الاولياء *آتنا فتحا مبينا

இறையச்சமுடையவர்களிலெல்லாம் அதிக இறையச்சமுடையவர் நீங்களே! சிறந்தவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவர் நீங்களே! இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறி விட்டீர்கள். எங்களுக்குத் தெளிவான வெற்றியை வழங்குங்கள்!

இறையச்சம் என்பது உள்ளத்தின் பாற்பட்ட ஒன்று. யாருக்கு இறையச்சம் உள்ளது? எந்த அளவுக்கு இது உள்ளது? என்பதையெல்லாம் இறைவன் மட்டுமே அறிவான் என்ற சாதாரண உண்மைக்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானியின் இறையச்சத்துக்கு நற்சான்று வழங்குகின்றது இந்தக் கவிதை.

நபிமார்களை விடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி அதிக இறையச்சமுடையவர் என்ற கருத்தையும் இந்தக் கதை தருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்கின்ற எந்த முஸ்லிமாவது இதை ஒப்புக் கொள்ள முடியுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். தெளிவான வெற்றியை வழங்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியவன் யார்? நபிகள் நாயகம் (ஸல்) கூட பல சந்தர்ப்பங்களில் தோற்றுள்ளனர்.

என்று இறைவன் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இந்த அதிகாரத்தை தான் வழங்கவில்லை என்று இறைவன் கூறும் இந்த வசனத்துடனும், மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களுடனும் இந்தக் கவிதை நேரடியாக மோதுகின்றது.

 

انت مبدع النوادر *مظهر ما فى الضمائر

مخبر ما فى السرائر *رحمة دنيا ودينا

அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக் கூடியவர் நீங்களே. பிறரது உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர் நீங்களே.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதை தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம். அதற்கு முரணாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.

 

كن لنا حرزا كنينا *كن لنا كهفا منيعا

عن بليات شفيعا *فى خطيات وسيعا

من عطيات تفينا

எங்களுக்குப் பாதுகாப்பு அரணாக ஆகி விடுங்கள். எங்களுக்கு துன்பங்களைத் தடுக்கும் குகையாக ஆகி விடுங்கள். தவறுகளுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய அருட்கொடைகளில் தாரளமாக நடந்து கொள்ளுங்கள்!

எல்லா அதிகாரங்களும் அப்துல் காதிர் ஜீலானியிடம் குவிந்து கிடப்பதாக முஹ்யித்தீன் மவ்லிதின் பாடல்கள் கூறுகின்றன. அல்லாஹ்விடம் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ் என்று ஒருவன் தேவையில்லை என்ற அளவுக்கு அப்துல் காதிரே அல்லாஹ்வாக்கப்படுகின்றார்.

இத்தகைய நச்சுக் கருத்துக்களைத் தான் பொருள் தெரியாமல் வணக்கமாகக் கருதி இந்தச் சமுதாயம் பாடிக் கொண்டிருக்கின்றது. இதைப் படிப்பதால், இதை நம்புவதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேருமா? அல்லாஹ் அருள் கிடைக்குமா? நடுநிலையுடன் மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

பொதுவாக மவ்லிதுகளும் குறிப்பாக முஹ்யித்தீன் மவ்லிதும் திருக்குர்ஆனுடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடனும் நேரடியாக மோதும் வகையில் அமைந்துள்ளன. அதைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அறிந்தோம். இது போன்ற நச்சுக் கருத்தைக் கொண்ட முஹ்யித்தீன் மவ்லிதின் மற்றொரு வரியைப் பாருங்கள்.

 

وهوالذي من كان نادى باسمه *فى شدة ينجو بغير تنجم

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

அவர் (அப்துல் காதிர் ஜீலானி) எத்தகையவர் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரை அழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட ஒருவரை அழைத்தால் அவர் ஈடேற்றம் அளிப்பார் என்பதும், அவரை அழைக்கலாம் என்பதும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கக் கூடியவையாகும். இறைவன் அல்லாதவர்களை அழைப்பது பற்றி திருக்ககுர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191, 194)

அல்லாஹ்வை விடுத்து நல்லடியார்களையும், மகான்களையும் அழைத்துப் பிரார்த்தித்து வந்த மக்களிடம் தான் அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே என்று இறைவன் கூறுகிறான்.

எத்தனைப் பெரிய மனிதர் என்றாலும் அவர்கள் இறைவனுக்கு அடிமைகள் தாம் என்பதையும அடிமைகளிடம் பிரார்த்திக்க முடியாது என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அழைத்துப் பிரார்த்தனை செய்யப்படுபவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அப்துல் காதிர் ஜீலானி உட்பட யாராக இருந்தாலும் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அப்துல் காதிர் ஜீலானி உட்பட எந்த மனிதராக அல்லாஹ்விடம் தேவையாகக் கூடியவர்கள் தாம். தேவையாகக் கூடியவர்களிடம் பிரார்த்திக்க முடியாது என்பதற்காகவே இங்கே இதை இறைவன் கூறுகிறான். மேலும் இறந்தவர்கள் எந்தப் பிரார்த்தனையையும் செவியேற்கும் நிலையில் இல்லை எனவும் கூறுகிறான்.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

அல்லாஹ்வை விடுத்து எவரையும் அழைக்க முடியாது. அழைப்பதை அவர்கள் செவியுற முடியாது. அழைப்பதை அறியவும் முடியாது. அணுவளவு அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இவ்வசனங்களுடன் இந்த மவ்லிது வரி நேரடியாக மோதுவதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காபிர்கள் சாதாரண நேரத்தில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்து வந்தனர். ஆனால் அவர்களுக்குத் தாங்க முடியாத பெருந்துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்து வந்தனர். கஷ்டமான நேரத்தில் அவரை அழைத்தால் ஈடேற்றம் பெறுவார் என்ற வரிகள் மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கைக்கு அழைப்பதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்க வேண்டும்.

இதோ மக்கத்துக்குக் காபிர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன் 31:32)

‘உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!’ என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன் 6:40,41)

கடுமையான துன்பங்கள் ஏற்படும் போது மட்டுமாவது மக்கத்துக் காபிர்கள் ஏக இறைவனை மட்டும் நம்பி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றுகளாகும். இதே கருத்தை 39.8, 10.12, 39.49, 27.62, 7.189, ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கையை முஸ்லிம்களிடம் திணிக்கக் கூடிய இந்த மவ்லிதை முஸ்லிம்கள் ஆதரிக்க முடியுமா? இதைப் படிப்பதால் அல்லாஹ்விடம் நன்மை கிடைக்குமா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு கூட அறியாத மூடர்களால் எழுதப்பட்ட இந்த மவ்லிதுக்காக நமது ஈமானை இழந்து விடலாமா?

இந்த மவ்லிதில் உள்ள இன்னும் பல அபத்தமான பாடல்களைப் பாருங்கள்.