பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

? மாலை நேரத்தில் சிறுவர்களை விடக்கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸின் சரியான விளக்கம் என்ன

 

? மாலை நேரத்தில் சிறுவர்களை விடக்கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?

சிக்கந்தர், துபை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் முற்பகுதி வந்து விட்டால் – அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் – உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3304

இந்த ஹதீஸில் விஷ ஜந்துக்களை ஷைத்தான்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடியவற்றை ஷைத்தான் எனக் குறிப்பிடும் வழக்கம் அரபு மக்களிடையே இருந்துள்ளது.

இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றித் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தமது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் பார்க்கின்றோம்.

சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக்குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஷைத்தான் பூட்டப்பட்ட கதவைத் திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகின்றது.

ஷைத்தான் மனதில் ஊடுறுவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டிவிடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. இரவில் கதவைப் பூட்டிவிட்டால் வீட்டிற்குள் பாம்பு, பல்லி, எலி போன்ற இடையூறு தரும் பிராணிகள் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்து.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாத்திரங்களை மூடி வையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டு விடுங்கள்; விளக்கை அணைத்து விடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.

உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4099

ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்க மாட்டான்; மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக எலியின் அபாயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பது நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.

No comments:

Post a Comment