பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?

 

? நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?

பாரிசல்

மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான்.

ஒவ்வொரு நபிக்கும் ஒரு அத்தாட்சியை இந்த உலகத்தில் வைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடவில்லை என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனில் சில நபிமார்களின் வரலாறு மட்டுமே கூறப்பட்டுள்ளது. பல நபிமார்களின் வரலாறுகளை இறைவன் கூறவில்லை.

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.

அல்குர்ஆன் 40:78

எனவே அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள ஒரு விஷயத்தை அல்லாஹ் ஏன் செய்யவில்லை என்று கேட்க முடியாது.

அவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.

அல்குர்ஆன் 85:16

அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.

அல்குர்ஆன் 21:23

No comments:

Post a Comment