பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

தொழும் போது முஅத்தினுடைய வலது புறமும், இடது புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்; இது தான் நபிவழி என்று ஒரு ஆலிம் கூறுகிறார். எது சரி?

 

? தொழும் போது இமாமுக்குப் பின்னால் நின்று முஅத்தின் இகாமத் சொல்கிறார்; பின்பு வருபவர்கள் வலது புறத்தை நிரப்பி விட்டு, பின்பு இடது புறத்தை நிரப்புவது சுன்னத் என்று தொழுது வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும் போது, இடது புறம் நின்ற இப்னு அப்பாஸை வலது புறத்தில் நிறுத்தினார்கள் என்ற அடிப் படையில் இவ்வாறு செய்கிறோம். ஆனால், முஅத்தினுடைய வலது புறமும், இடது புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்; இது தான் நபிவழி என்று ஒரு ஆலிம் கூறுகிறார். இரண்டில் எது சரி? விளக்கவும்.

எம். திவான் மைதீன், பெரியகுளம்

! நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை இடது புறத்திலிருந்து மாற்றி வலது புறத்தில் நிறுத்திய செய்தியைப் பொறுத்த வரை, இரண்டு நபர்கள் மட்டுமே தொழும் போது உள்ள சட்டமாகும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடது புறம் நின்றேன். அவர்கள் என்னைச் சுற்றிக் கொண்டு வந்து தமது வலது புறமாக நிறுத்தினார்கள். பிறகு ஜப்பார் பின் ஸஹ்ர் வந்து உளூச் செய்து விட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு இடது புறமாக நின்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரது கைகளையும் சேர்த்துப் பிடித்து, எங்களைத் தள்ளி, தமக்குப் பின்னால் நிற்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5328

நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுது விட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், ஆம் என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்கும் இடையே தொழுவதற்காக நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூவுச் செய்த போது, எங்கள் கைகளை எங்களுடைய முழங்கால்கள் மீது வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோர்த்துக் கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக் கொண்டார்கள். தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா, அஸ்வத்

நூல்: முஸ்லிம் 831

இந்த ஹதீஸ்கள் ஜமாஅத் தொழுகையில் இமாமுக்குப் பின்னால் வலது புறமும் இடது புறமும் மாறி மாறி நிற்பதை வலியுறுத்துகின்றன.

இது தவிர வரிசைகளில் இடைவெளி ஏற்படுத்தக் கூடாது என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

வலது புறத்தில் நிற்பது தான் சிறப்பு என்றால், 100 பேர் கொண்ட ஒரு வரிசையில் இமாமுக்கு வலது புறத்தில் 50 பேர் முதலில் நின்று விட்டால், அதன் பின்னர் வருபவர்கள் முதல் வரிசையில் இடம் இருக்கும் போதே பின்னால் உள்ள வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முதல் வரிசை பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டும். இது போன்ற நிலைகள் ஜமாஅத் தொழுகைகளில் சாத்தியமில்லை.

எனவே இரண்டுக்கு மேற்பட்டவர்கள் தொழும் போது, பின்பற்றித் தொழுபவர்கள் இமாமுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் மாறி மாறி நிற்பது தான் சட்டமாகும்.

இமாமின் வலது புறமும், இடது புறமும் சமமாக இடம் இருக்கும் போது வலது புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம் வரிசையின் வலது புறத்தை விட இடது புறத்தில் ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இடது புறம் நிற்பது தான் வரிசையைப் பூர்த்தி செய்யும் ஒழுங்காகும். அதாவது இமாமை மையமாக வைத்து இரு புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்.

“வரிசைகளில் வலது புறம் இருப்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 578, இப்னுமாஜா 995

இந்த ஹதீஸில், வலது புறத்தில் நிற்பது சிறந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் தொழுகையில் வரிசையைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால், அதற்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஒன்றை விட மற்றொன்றிற்கு நன்மை அதிகம் என்றால், அதற்காக முயற்சி எடுத்து அதை அடையும் வாய்ப்பு இருக்க வேண்டும். உதாரணமாக முதல் வரிசையில் நிற்பது சிறப்பு என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதற்காக தொழுகைக்கு முதலிலேயே வந்து காத்திருந்து முதல் வரிசையை அடைந்து அதற்கான நன்மையைப் பெற முடியும்.

ஆனால் வலது புறத்தில் நிற்பது சிறப்பு என்ற நன்மையை அவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு பெற முடியாது. காரணம், முதலில் வருபவர்களுக்கு இடது புறமும், அதற்குப் பிறகு வருபவர்களுக்கு அடுத்த வரிசையின் வலது புறமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே வலது புறம் இடது புறம் என்பதை விட, தொழுகைக்கு முந்தி வருபவர் பிந்தி வருபவர் என்ற அடிப்படையில் தான் நன்மை அமைந்துள்ளது.

பொதுவாக நல்ல காரியங்களை வலது புறத்தைக் கொண்டு துவங்குவதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அது போன்று தொழுகையின் வரிசையைத் துவங்கும் போதும் வலது புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள முஸ்லிம் 831 ஹதீஸில், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ருகூவில் தொடைகளுக்கு இடையே கைகளை இடுக்கி வைத்ததாக இடம் பெற்றுள்ளது. இதற்கு தத்பீக் எனப்படும். ருகூவில் இவ்வாறு தத்பீக் செய்ய வேண்டும் என்ற சட்டம் ஆரம்பத்தில் அமலில் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு விட்டது. இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

இந்தச் சட்டம் மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே இந்த ஹதீஸிலிருந்து, ருகூவில் தத்பீக் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஆனால் அதே சமயம், இந்த ஹதீஸில் கூறப்படும் விஷயங்கள் நபிவழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், தொழுகை முடிந்த பின் இது நபிவழி என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே, தத்பீக் எனும் சட்டம் மாற்றப்பட்ட விபரம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இந்த ஹதீஸில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் தவறானது என்றோ, அல்லது இந்த ஹதீஸே பலவீனமானது என்றோ விளங்கிக் கொள்ளக்கூடாது.

No comments:

Post a Comment