பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

 

? வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?

உவைசுல் கரனி

வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குத் தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை.

வீட்டை இடித்து கட்டுவதற்கோ வீட்டின் அமைப்பை மாற்றுவதற்கோ அல்லது வீட்டின் உரிமையாளரைக் கேட்காமல் வேறு ஒருவரை அழைத்து வந்து உள்வாடகை விடுவதற்கோ அனுமதியில்லை. இவர் வாடகைக்கு இருக்கும் நேரத்தில் எதார்த்தமாக வீடு இடிந்து விழுந்துவிட்டால் அல்லது அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் அதற்கு இவர் பொறுப்பேற்க மாட்டார். வீட்டின் உரிமையாளரே இதை ஏற்க வேண்டிவரும்.

ஆனால் கடன் கொடுப்பது இது போன்றதல்ல.

ஒருவருக்கு நீங்கள் பணத்தைக் கடனாகக் கொடுத்தால் அந்தப் பணம் முழுவதுமாக அவருடைய கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகின்றது. பணம் தொலைந்தாலோ திருட்டுப் போனாலோ அதற்குக் கடன் வாங்கியவர் தான் பொறுப்பாளி. கடன் கொடுத்தவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார். வாங்கிய பணத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அதைத் திருப்பிச் செலுத்துவது கடன் வாங்கியவரின் கடமை.

மேலும் வாடகைக்கு விடும் போது வாடகைக்குப் பெற்றவர் குடியிருக்கும் பலனை உறுதியாக அனுபவித்து விடுகின்றார். பலனைப் பெற்றெதற்குக் கூலியாக வாடகையைச் செலுத்துகிறார். அதாவது நிச்சயித்த பயனை வாடகைக்கு இருப்பவர் அடைந்து கொள்கிறார். அவராக வீட்டைப் பூட்டி விட்டுப் பயன்படுத்தாமல் தனக்குத் தானே இழப்பு ஏற்படுத்தினால் தவிர வாடகைக்கு இருப்பவருக்கு எந்த நட்டமும் இல்லை. கொடுக்கும் வாடகைக்கு உரிய பலன் அவருக்கு கிடைத்து விடுகிறது.

ஆனால் வட்டிக்குக் கடன் பெறுபவர் அந்தப் பணத்தை வைத்து உறுதியாகப் பலனடைவார் என்று கூற முடியாது. பலனடையலாம்; பலனடையாமல் நஷ்டப்படலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதே பெரிய சுமையாகும். இதில் வாங்கியதை விடக் கூடுதலாக கொடு என்று கேட்பது அவனுக்குச் சுமைக்கு மேல் சுமையைக் கொடுக்கும். இதனால் மனிதாபிமானம் இங்கே அடிபட்டுப் போகின்றது.

மேலும் வீட்டைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்த, பயன்படுத்த அதில் தேய்மானம் கண்டிப்பாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பணத்தைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்துவதால் கண்டிப்பாக மதிப்பு குறையாது. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு என்றாலும் அதற்கு கடன் வாங்கியவர் காரணமாக மாட்டார். கடன் கொடுக்காமல் நமது பெட்டியில் அந்தப் பணத்தைப் பூட்டி வைத்தாலும் பண வீக்கத்தால் ஏற்படும் மதிப்பு குறைவு ஏற்படத் தான் செய்யும்.

பொருளாதார மாற்றத்தால் பணத்தின் மதிப்பு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது போல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நடைமுறையில் அத்தியாவசியமான பல பொருட்களை வாடகையின் அடிப்படையில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

ஓரிடத்திற்கு இலகுவாகச் சென்று வர கார், பஸ் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்கின்றோம். இரயில்களிலும் பேருந்துகளிலும் விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயனம் செய்கின்றோம். வெறுமனே பெட்ரோலுக்கு மட்டும் நாம் பணம் கட்டுவதில்லை. பெட்ரோலுடன் அந்த வாகனத்தைப் பயன்படுத்தியற்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறோம். பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது மைக் செட், சொற்பொழிவு மேடை, ஜென்ரேட்டர், மின் விளக்குகள் போன்ற பொருட்களை வாடகைக்கு எடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.

பொருளின் தேய்மானம் காரணமாகவும் மற்றவரின் பொருளில் நிச்சயமான பயனை நாம் அடைந்து விடுகிறோம் என்ற அடிப்படையிலும் தான் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் வாடகையை அனுமதித்துள்ளான்; வட்டியைத் தடை செய்துள்ளான் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment