பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, September 24, 2020

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

மார்க்க கேள்வி-பதில்

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

வயதில் அதிகமான பெண்ணையோ அல்லது தன்னை விட வயதில் குறைவான பெண்ணையோ. விதவைப் பெண்ணையோ, கன்னிப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் நபியாவதற்கு முன்பாக தம்முடைய இருபத்தைந்தாம் வயதில் தம்மைவிட வயதில் மூத்தவரான அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். தாம் நபியான பிறகும் ஹதீஜா (ரலி) அவர்களுடன் பல்லாண்டுகள் வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களில் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வும், ஜிப்ரீலும், ஹதீஜா (ரலி) அவர்களுக்கு ஸலாம் சொல்லியனுப்பி சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அளவிற்கு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு …அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை பற்றி நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 3820

பின்வரும் ஹதீஸும் நபியவர்கள் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையின் மகிமையை பறைசாற்றுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாலா பின்த்து குவைலித் (ரலி) கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும் என்று சொன்னார்கள். உடனே நான் ரோஷமடைந்து எப்போதோ மரணமடைந்து விட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்) என்று கேட்டேன்.

நூல் : புகாரி 3821

மேலும் நபித்தோழர்களில் பலர் தம்மை விட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். எனவே இதற்கு மார்க்க அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை.

ஏகத்துவம்.

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா?

மார்க்க கேள்வி - பதில்

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா?

திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும்.

திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்கள்

என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.

திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை: சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

செலவு இல்லாமல் ஆற்றப்படும் உரையை மட்டும் நமது ஸ்மார்ட் போன் மூலம் எடுத்து அவ்வுரையைப் பரப்புவது இதில் சேராது.

எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.

குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.

ஆனால் திருமணத்திற்கும், பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பது தவறு.

பொதுவாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது; யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது.

திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல்: அஹ்மத் 15545

இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது.

தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது.

மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ, வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல!

திருமண உரை என்று தனியாக எதுவும் இல்லை. பொதுவாக எந்த இடத்திலும் பிரசங்கம், சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்காக பொதுக்கூட்டம் போடுகின்றோம். இதைத் தவறு என்று யாரும் வாதிடுவது கிடையாது. அது போல் திருமணத்தின் போதும் ஒருவர் மார்க்கத்தைப் போதித்தால், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் அது கூடாது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்த இடத்தில் இந்தக் கருத்தைக் கூறினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று ஒருவர் நினைத்தால் அதை திருமண சபை மட்டுமல்ல, எந்த சபையிலும் சொல்லலாம்.

உதாரணமாக ஜனாஸா தொழுகையை நடத்துவதற்காக ஒருவர் முன்னே நிற்கின்றார். அந்தத் தொழுகையில் கலந்து கொள்பவர்கள் ஹதீஸ் அடிப்படையில் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, ஜனாஸா தொழுகையின் சட்டதிட்டங்களைப் பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்துகின்றார். இதற்கு ஜனாஸா உரை என்று பெயரிட்டு, இது கூடுமா என்று கேட்க மாட்டோம்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். அந்தச் சமயத்தில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு நிச்சயமாக ஒரு பயனைத் தரும் என்று ஒருவர் கருதினால் அவர் அங்கு பிரச்சாரம் செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் போதும், தேவை ஏற்படும் போதும் ஓத வேண்டிய தஷஹ்ஹுதைக் கற்றுத் தந்தார்கள். தொழுகையில் உள்ள தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத் (என்று துவங்கும் துஆ) ஆகும். தேவை ஏற்படும் போது சொல்லும் தஷஹ்ஹுத் கீழ்க்கண்ட தஷஹ்ஹுத் ஆகும். நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்.

அவனிடமே நாம் பாவமன்னிப்பு தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்பாடுகளை விட்டும் அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அல்லாஹ் வழிகெடுத்தவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒப்புக் கொள்கிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள்.;எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)

நூல்: திர்மிதீ 1023

இந்த அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவை ஏற்படும் போது இறையச்சத்தைப் பற்றி மக்களுக்குப் போதிக்குமாறு கற்றுத் தந்துள்ளதால் எங்கு தேவை ஏற்பட்டாலும் நாம் பிரச்சாரம் செய்வது நமது கடமையாகும். அது திருமண சபையாக இருந்தாலும், வேறு எந்த சபையாக இருந்தாலும் சரி.

ஆனால் திருமணத்தின் போது உரை நிகழ்த்துவதை திருமணம் நிறைவேறுவதற்கான விதிமுறைகளில் ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. குத்பா ஓதினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் கருதும் நிலை இருப்பதால் அதைத் தவறு என்று நிரூபிப்பதற்காக குத்பா இல்லாமலும் திருமணங்களை நடத்திக் காட்ட வேண்டும்.

பிரசங்கம் செய்வதே தவறு என்று கூறவும் கூடாது. அதேபோல் திருமணத்தில் பிரசங்கம் செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தவும் கூடாது. திருமணத்திற்கு குத்பா அவசியமில்லை என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்காக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் அவ்வப்போது குத்பா இல்லாத திருமணங்களையும் நடத்த வேண்டும்.

ஏகத்துவம்.

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

மார்க்க கேள்வி-பதில்

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

ஒரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா?

பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்குத் தடையோ அல்லது ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ மார்க்கத்தில் இல்லை.

ஆனால் அந்தப் பெண் வசதியுள்ளவள் என்பதற்காக அவளைத் திருமணம் செய்வதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.(பார்க்க புகாரி 5090) பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் மார்க்கம் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்)

அல்குர்ஆன் 2:221

இந்த வசனத்திலும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் போது அவளது கொள்கையைத் தான் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் கூட மார்க்கத்தை முன்னிறுத்தாமல் குடும்பம், செல்வம், அழகு போன்றவற்றிற்கே முன்னுரிமை அளிக்கின்றார்கள்.

ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எத்தனையோ பெண்கள் மாப்பிள்ளை கிடைக்காமல் காத்துக் கிடக்கின்றனர். இவர்களையெல்லாம் விட்டு விட்டு தர்காவுக்குச் செல்லும் ஒரு பெண்ணைப் போய் திருமணம் செய்து கொள்கின்றனர் என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் காற்றில் பறக்க விடுகின்றனர் என்பது தான் அர்த்தம்

ஏகத்துவம்.

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?



மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.

மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் வரதட்சனையாகும்.

அன்பளிப்பு என்பது தந்தை தானாக விரும்பிக் கொடுப்பதாகும். அவர் விரும்பினால் கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் உரிமை உள்ளது. எவ்வளவு அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்பதையும் தந்தையே தீர்மானிப்பார்.

உங்கள் மகளுக்கு நீங்கள் நகை போட வேண்டும். அந்த நகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த உரிமையும் இல்லை.

அப்படி கேட்பதற்குக் காரணம் இவள் நம்முடைய வீட்டுக்கு வர இருக்கின்றாள். இவள் அதிகமான நகைகளுடனும் சீர் வரிசைகளுடனும் வந்தால் பிறகு அந்த நகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசையே இதற்குக் காரணம். எனவே இது தந்தை மகளுக்கு கொடுப்பது என்ற போர்வையில் வாங்கப்படுகின்ற வரதட்சனையாகும்.

மேலும் சீர் என்ற பெயரில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பொருட்களை வாங்கித் தருகின்றனர். இதுவும் வரதட்சனையாகும்.

நீங்கள் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பே அவருக்காக நகைகள் வாங்கிக் கொடுத்திருந்தால் அது உங்கள் மகளின் உடமையாக இருக்கும் வரை வரதட்சனையாக ஆகாது. உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுத்ததை திருமணத்தைக் காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டார் உரிமை கொண்டாடினால் அது வரதட்சனையாகிவிடும்.

திருமணம் முடிந்து மருமகன் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின் உறவினர் என்ற முறையில் அவருடைய முன்னேற்றத்துக்கு உதவினால் அதுவும் வரதட்சனையாகாது.

திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிர்பந்தனையாக பணமோ, பொருளோ கேட்கப்பட்டால் அல்லது நாம் கொடுக்காவிட்டால் நம் மகளை நல்லபடி நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கொடுத்தால் அது வரதட்சனையாக ஆகும். இது மிகவும் நுணுக்கமான விஷயம். கவனமாக இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நிஜமான அன்பளிப்பும் பாவமாகத் தென்பட்டு விடும். அல்லது வரதட்சனையும் அன்பளிப்பாக கருதப்பட்டு விடும்.

ஏகத்துவம்.

வரதட்சணையை ஒழிப்போம்

குர்ஆன் விளக்கங்கள்

வரதட்சணையை ஒழிப்போம்

நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரு விஷயங்கள் மஹர் மற்றும் வரதட்சணை. ஆனால் இவற்றில் குழப்பம் கொள்ள எவ்வித அவசியமோ தேவையோ கிடையாது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இரண்டும் தெளிவானவை. ஒன்று இறைவனின் கட்டளை, மற்றொன்று மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்தியது. ஒன்று நேர்வழி, மற்றொன்று வழிகேடு. எனவே நாம் முதலில் மஹர் மற்றும் வரதட்சணையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மஹர் கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என்பது நம் இறைவனின் கட்டளை. அதை பின்வரும் திருமறை வசனம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

(அல் குர்-ஆன் 4:4)

இந்த திருக்குர் ஆன் வசனம் அறியாத எந்த ஆணும் பெண்ணும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு இஸ்லாமியத் திருமணத்திலும் மிக மிக முக்கியமான அவசியமான விஷயமாக இருப்பது மஹர். மஹர் தொகையைத் தீர்மானித்துப் பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது ஏனெனில் திருமண வாழ்வில் அதிகமாக இழப்பது பெண்கள் தாம். இதைக் கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்குக் கொடுத்துள்ளது. இது அப்பெண்ணிற்குப் பாதுகாப்பானதாக உள்ளது.

ஆண்கள், பெண்களுக்குக் கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பதே நம் இஸ்லாமிய சட்டம். ஆனால் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கிவிட்டுப் பின்னர் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற எந்த விஷயமும் குர் ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறிருக்கையில் வரதட்சணை வாங்கும் பழக்கம் இஸ்லாமியர்களிடையே எப்படி வந்தது எனும் கேள்வி எழலாம். வரதட்சணை வாங்குதல் என்பது மாற்று மதத்தவர்களின் செயல். தங்களது பெண் தன் கணவர் வீட்டிற்குச் செல்லும் போது சீதனத்துடனும், வரதட்சணையுடனும் தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் செயல்.

இதுவே முஸ்லிம்களிடையே வரதட்சணை வாங்கும் பழக்கம் இடம் பெற காரணமாகிவிட்டது.. அக்காலத்தில் மக்கள் செய்த இத்தகைய அறியாமைச் செயலை, இன்று தவறு என்று அறிந்திருந்தும் நாம் தொடர்வது மிகவும் இழிவிற்குறியதாகும். திருமணத்தின் அவசியமான விஷயமாக இருந்த மஹர் மறைந்து இப்போது வரதட்சனையே மிக முக்கியமாக பேசப்படுகிறது. இன்று பெரும்பாலான நாடுகளிலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது..

மஹர் கொடுத்து மணமுடிக்கும் வழக்கம் போய் இப்போதோ பெண் வீட்டாரிடமிருந்து என்னென்ன வாங்கலாம், எதையெல்லாம் சுரண்டலாம் என்பதே திருமணம் முடிவானவுடன் பையன் வீட்டாரின் மனதில் எழும் முதல் சிந்தனையாக உள்ளது. பெண் எவ்வளவு படித்திருந்தாலும், மார்க்கப் பற்று உடையவளாக இருந்தாலும், அழகானவளாகவே இருந்தாலும் அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தாலும், தாங்கள் கேட்ட வரதட்சணையைத் தர சம்மதித்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்வதில் சிறிதளவும் அச்சமின்றி மக்கள் உள்ளனர்.

புகாரி ஹதீஸ் 2697. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இப்போதெல்லாம் பெண் பார்க்கச் செல்லும் போதே “முதலில் எத்தனை பவுன்” போடுவாங்க என்பதே முதல் கேள்வியாக உள்ளது. இன்னும் சிலர் இவ்வளவு பவுன் போடணும், சம்மதமா? என்றே நேரடியாகக் கட்டளையிடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டில் இத்தனை வருடங்களாக ஒன்றுமே இல்லாதது போல், வீட்டு சாமான்கள் அனைத்தையும் அதாவது, கட்டில், மெத்தை, மிக்சி, வாசிங்மெஷின், டி.வி, பாத்திரங்கள், மாப்பிள்ளைக்கு பைக், இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்தால் கார் முதல் கல்யாண செலவு வரை அனைத்தையும் கேட்பார்கள்.

ஆனால் இங்கிதமின்றி அவர்கள் அளிக்கும் வரதட்சணை லிஸ்டிற்கு அவர்கள் அளிக்கும் சமாதானம், “எல்லாம் உங்க பொண்ணு வசதியா இருக்கனும்னு தான்…” சிந்தனை அறவேயற்ற சமாளிப்பு. நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் கூட அவர்களை நன்முறையில் உபசரிக்க நாம் வசதிகள் செய்து கொடுக்கிறோம். இதற்கு அவர்களிடம் எந்த பணமும் லாபமும் பெறாத போது, நம் வீட்டில் நம் குடும்பத்தில் ஒருவராக வாழ வரும் பெண்ணிடமே வரதட்சணை பெற்று, அவள் பெயரைக் கூறி நம் வீட்டிற்கு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் முட்டாள்தனமாகும்.

இப்போ உள்ள காலங்களில் எல்லாம் மாப்பிள்ளைக்கு தனி விலை….Doctor-ஆக இருந்தால் 100 பவுன், Engineer-ஆக இருந்தால் 75 பவுன்… இப்படி மணமகள் Doctor-ஆகவோ Engineer-ஆகவோ நல்ல பதவியில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களும் இவ்வளவு கொடுத்தே தான் ஆகவேண்டும்.

மணமகனிடம் யாரேனும், ”வரதட்சணை வாங்காதப்பா.. தவறு” என்று சொன்னால், “நான் வாங்கல, எங்க அம்மா தான் கேட்கிறாங்க” என்று தப்பித்து விடுகின்றனர்.. தவறு என்று தெரிந்தால் தடுக்க வேண்டியது தானே? அம்மா பேச்சை இதுவரை தட்டியதே இல்லை என்பது போல் பேசுவது.. பெண் வீட்டினரிடம் பெறும் அனைத்தையும் இவர்களும் சேர்ந்து தான் அனுபவிக்கின்றனர். வரதட்சணையாகப் பெறும் பைக்கை மாமியாரோ மாமனாரோ ஓட்டப்போவதில்லை. ஆனால் அம்மா ஒரு சாக்கு. அம்மாவைப் பேசவிட்டு இவர் வாங்கிக்கொள்வாராம், ஆனால் இவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லையாம்..!! நம்பிவிட்டீர்களா???

தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்வதோ, துணை நிற்பதோ நிச்சயமாகப் பாவம் தான். யார் சொன்னாலும் வரதட்சணை வாங்க மாட்டேன் என்பதில் ஆணும், யார் வற்புறுத்தினாலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண் வீட்டாரும் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்நோயை வேருடன் அழிக்க முடியும்.

இன்னும் இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இதைத் தடுக்க வேண்டிய ஜமாஅத்தார்களோ தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். ஏழைப் பெண்ணாக இருந்தாலும் குறைந்தது 10 பவுனாவது போட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஜமாஅத்தார்களோ, இவ்வாறு கேட்பது தவறு என்று கூட எடுத்துச் சொல்லாமல் தள்ளி நின்று வேடிக்கையே பார்க்கின்றனர். இன்னும் சில ஜமாஅத்களில் “இவர்கள் எங்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்களே! இவரது பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்!” என்று கடிதம் எழுதித் தருகின்றனர்.

பெண் வீட்டார் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு யார் யார் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விபட்டுள்ளனரோ அவர்களுக்கு எல்லாம் அக்கடிதத்தை அனுப்பி உதவி செய்யும்படி கெஞ்சுகின்றனர். இந்த ஜமாத்தார்கள் நினைத்தால் அவர்களே இதைத் தடுக்க முடியும் (அ) மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி “தவறு” எனப் புரிய வைக்க முடியும். புரியவைப்பது அவர்களது கடமையும் கூட. இவர்களே அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். வரதட்சணை வாங்குவது தவறு என நன்றாகத் தெரிந்தும் தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். எனவே மக்களும் அதைத் தவிர்க்காமல் தாங்கள் செய்யும் தவறுகளில் நிலைத்து நிற்கின்றனர். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட பின் தீர்த்து வைக்க முயற்சிப்பது மட்டுமே ஜமாஅத்தின் கடமையல்ல.. அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி பிரச்சினையில் சிக்கிக்கொள்வதிலிருந்து பாதுகாப்பதும் அவர்களது தலையாயக் கடமையாகும்.

இந்த இடத்தில் ஜமாஅத்தார்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஜமாஅத்தார்களே! நீங்கள் இல்லாமல் எந்தத் திருமணமும் நடப்பதில்லை. உங்கள் அனுமதி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தால் அதையும் மீறி யாரும் வாங்கப் போவதில்லை. வரதட்சணையை ஒழிப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அதை உணர்ந்து செயல்படுங்கள். “வரதட்சணை வாங்கினால் உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மாட்டோம், உங்கள் திருமணத்தில் ஜாமத்தார் முன்னிலை வகுக்கமாட்டார்கள் என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக பல மக்கள் சிந்திக்கத் தொடங்கி திருந்த முயற்சிப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

வரதட்சணையைத் தடுக்கும் இஸ்லாம் அப்பெண்ணிற்காக அவளது தந்தை மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்புகளை அனுமதித்துள்ளது.. அதற்கு நபி ஸல் அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பு சாட்சியாக உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்)

முஸ்லிமல்லாதவர்களே இன்றைய காலங்களில் நிதர்சனத்தைப் புரிந்து, வரதட்சணையின் கொடூரப்பக்கத்தை உணர்ந்து பலர் வரதட்சணையின்றி புரட்சித் திருமணங்கள் நிகழ்த்துகின்றனர். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே நம் இறைவன் நமக்காக மிகத் திறம்பட வகுத்துக் கொடுத்துள்ள சட்டங்களை நாம் பேணி நடப்பது நமக்கே நன்மை பயக்கும். வரதட்சணை ஒழிப்பில் உலகிற்கு என்றும் நாம் தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

பெண்குழந்தைகளைப் பெற்றுப் பராமரிப்பவர்களைக் கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இன்று பெண்குழந்தை பிறந்தாலே, அதன் பெற்றொருக்குக் கவலை அதிகரித்துவிடுகிறது. இத்தகைய இன்னல்களை நம் சமூகத்திலிருந்து களையவும் மார்க்கத்தை நிலைநாட்டவும் நாம் எடுக்கும் முயற்சி சிறந்த பயனுள்ளதாக அமையும். திருமணம் என்பது இருமனங்கள் சேரும் உன்னதமான நிகழ்வு. திருமணத்தையும் வியாபாரமாக்குவதைத் தடுக்கும், எதிர்க்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே இஸ்லாமியர்களே, திருமணம் எனும் பந்தத்தை வரதட்சணை வாங்கி வாட விடாமல், மஹர் எனும் மணக்கொடையை மணப்பெண்ணிற்கு அளித்து மண வாழ்க்கையை தீன் வழியில் மகிழ்வுடன் மலரச்செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக… ஆமின்..

எழுதியவர்
உங்கள் சகோதரி நூர் அல் ஹயா

ஏகத்துவம்.

வரதட்சணை என்பதற்கான அளவுக்கோல் என்ன ?



வரதட்சணை என்பதற்கான அளவுக்கோல் என்ன ?

வரதட்சணை என்று நேரடியாகச் சொல்லித் தந்தால் தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர்.

சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான்.

பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

6979 அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள்.

அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம் என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக!

உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன் என்று கூறினார்கள்.

பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்

ஏகத்துவம்.

வீடு வாங்குவது ?



வீடு வாங்குவது வரதட்சனையாகுமா?

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனைவியருக்கும் வீடு கட்டி கொடுத்து இருக்கிறார்களா?

அல்லது ஏதாவது ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம் தேவை.

உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக இருக்கிறது. மனைவிக்காக கணவன் கொடுப்பது எதுவும் வரதட்சணையில் சேராது. கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வதற்காக தன்னுடைய உழைப்பில் வீடு கட்டிக் கொள்வதோ அல்லது மனைவிக்கு வழங்குவதோ மார்க்க அடிப்படையில் தவறானது கிடையாது.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அப்பெண் வீட்டாரிடம் ஒரு வீட்டையே வரதட்சணையாகப் பெறும் கொடுமை சில முஸ்லிம் ஊர்களில் நிலவி வருகிறது. இது மாபெரும் சமூகக் கொடுமை ஆகும். இதைத்தான் நாம் வரதட்சணைக் கொடுமை என்று கூறிவருகிறோம்.

நபியவர்கள் மரணிப்பதற்கு முன்னால் உயிருடன் இருந்த அனைத்து மனைவிமார்களும் தனித்தனி வீடுகளில் வசித்ததாக நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். இது நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களுக்கு செய்து கொடுத்த வசதிதானே தவிர நபியவர்கள் தம்முடைய மனைவியின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றவை அல்ல.

நபியவர்களின் மனைவிமார்கள் வசித்தது அனைத்துமே நபியவர்களின் வீடுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். அன்சாரிகளான சில அண்டை வீட்டார் அல்லாஹ்வின் தூதருக்கு இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.

ஏகத்துவம்.