பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, October 21, 2010

அகீகா கொடுப்பது எப்படி

அகீகா கொடுப்பது எப்படி??

குழந்தை பிறந்தால் தலை முடி கலையும் போது அதன் எடைக்கு நிகராக தங்கம் கொடுக்க வேண்டுமா? காது குத்துவது தவறா? அகீகா குழந்தை பிறந்து 14,21 ஆகிய நாட்களில் கொடுக்கலாமா?


பதில் :  காது மூக்கு குத்துதல் தொடர்பாக நமது இணையதளத்தில் முன்னரே வெளியிடப் பட்ட பதிலைக் காண்க.


கட்டுரை வடிவில்
ஆடியோ வடிவில்.


ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?


அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.


السنن الكبرى للبيهقي كتاب الضحايا


جماع أبواب العقيقة باب ما جاء في وقت العقيقة وحلق الرأس والتسمية


وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان ، ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : ' العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين ' *


அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)


இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸாயீ இவர் பலவினமானவர் என்று இமாம் அபூ ஸுர்ஆ இமாம் இப்னு ஹஜர் இமாம் அஹ்மது பின் ஹம்பள் இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் அபூஹாதிம் மற்றும் பலர் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.


பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.


அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.


அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.


நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.


முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?


பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.


நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.


அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)


இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.


இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.


மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூ-ல் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.


அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.


இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.


*************************************************************************************

பெண்கள் காது மூக்கு குத்தலாமா??


அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த கருத்து வேறுபாட்டிற்குக் காரணம்.


ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.


"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)


அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. காதுகளிலும் மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.


அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.


பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)


மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்ட காரியங்களை புரியம் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இவர்கள் சபிக்கப்படுவதற்கான காரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இறைவன் அளித்த உருவத்தை மாற்றம் செய்வது தான் இவர்கள் சபிக்கப்படுவதற்குக் காரணம். அப்படியானால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வது என்ற அம்சம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.


காது மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.


மேல கூறப்பட்ட காரியங்களைப் பெண்கள் அழகிற்காக செய்கிறார்கள். அழகிற்காக அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யும் குணம் குறிப்பாக பெண்களிடம் இருப்பதால் பெண்களை நபியவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். மேலும் ஒரு பெண் தனது அலங்காரத்தை மார்க்கத்திற்கு உட்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். அழகைக் காரணம் காட்டி இது போன்ற காரியங்களைச் செய்ய முடியாது.


இன்றைக்கு காது குத்தும் பெண்கள் தங்களை அலங்கரிப்பதற்காகவே காது மூக்கு குத்திக் கொள்கிறார்கள். இந்தக் காரியத்தை செய்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். எனவே மேற்கண்ட செய்தி காது குத்தக் கூடாது என்ற கருத்துடன் கச்சிதமாக பொருந்திப் போகின்றது.


காதுகளிலும் மூக்கிலும் துளையிட்டு அதில் ஆபரணங்களைச் சேர்த்தால் தான் அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் காது மூக்கு குத்திக் கொள்கிறோம். காதுகளிலும் மூக்கிலும் துளை இருப்பது தேவையான ஒன்றாகும். இந்தத் தேவையான அம்சத்தை இறைவன் ஏற்படுத்தாமல் விட்டு விட்டான் என்றக் கருத்தை இந்தச் செயல் பிரதிபலிக்கின்றது. ஆனால் இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்றும் அல்லாஹ் சிறப்பாக படைக்கக் கூடியவன் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.


மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
அல்குர்ஆன் (95 : 4)


பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
அல்குர்ஆன் (23 : 14)


"அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு "பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?
அல்குர்ஆன் (37 : 125)


எனவே காது மற்றும் மூக்கில் துளையிடுவது இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் குத்திக் கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக் கூடாது என்றோ நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. மாறாக ஒப்புதல் வழங்கினார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (98)


காது குத்தலாம் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆனும் ஹதீஸும் கூறுகிறது. காது மூக்கு குத்துவது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் மேற்கண்ட ஹதீஸை இதற்கு முரணில்லாத வகையில் விளங்க வேண்டும்.


நாம் முன்பு கூறியதைப் போல் சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்த காதில் ஆபரணங்களை போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற விளக்கமே இந்த ஹதீஸிற்குப் பொருந்திப் போகின்றது.


ஏனெனில் நபியவர்களுக்கு முன்னிலையில் யாராவது காதுகுத்தியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் கூட பெண்கள் நபியவர்களுக்கு முன்னால் காது குத்தியதாக கூறப்படவில்லை. ஏற்கனவே காது குத்திய பெண்கள் குத்திய காதுகளோடு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் காட்சிதந்தார்கள் என்றே ஹதீஸ் கூறுகிறது.


மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தவறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.


ஆபரணங்களைக் காதில் தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இறைவன் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்ற காரணத்தக்காகத் தான் காது குத்தக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஒருவர் சட்டம் தெரியாமல் குத்திவிட்டால் துளையிடப்பட்ட காதை அவர் என்ன செய்வது? சட்டம் தெரிந்த பிறகு முன்பு துளையிட்ட காதில் ஆபரணங்களை அணிவது எந்த அடிப்படையிலும் தவறல்ல.


எனவே காது மூக்கு குத்தக்கூடாது என்ற மார்க்கச் சட்டம் தெரிந்த பிறகு அதை குத்துவது கூடாது. சட்டம் தெரியாத நேரத்தில் குத்தியிருந்தால் அதில் ஆபரணங்களை தொங்க விடுவதற்குத் தடையில்லை.


இது குறித்து ஆடியோ உரையைக் கேடக
ஆடியோ1
ஆடியோ2



*************************************************************************************

No comments:

Post a Comment