பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 4, 2018

கட்டப்பட்ட_சமாதிகளை_இடிக்க_வேண்டுமா

#நம்பிக்கை

#கட்டப்பட்ட_சமாதிகளை_இடிக்க_வேண்டுமா?

#பதில்_உயர்த்தப்பட்ட_சமாதிகளை_இடிக்கத்தான்_வேண்டும்

மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبى شيبة وزهير بن حرب قال يحيى أخبرنا وقال الآخران حدثنا وكيع عن سفيان عن حبيب بن أبى ثابت عن أبى وائل عن أبى الهياج الأسدى قال قال لى على بن أبى طالب ألا أبعثك على ما بعثنى عليه رسول الله -صلى الله عليه وسلم- أن لا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609

சமாதிகள் கட்டப்பட்டால் அதை இடித்து தரைமட்டமாக ஆக்க வேண்டும் என்று நபியவர்கள் தடை செய்திருந்தது இந்த ஹதீஸ் மூலம் தெரிகின்றது.

இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழிகெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேற்கண்ட நபிமொழியில் ‘கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே’ என்று கூறப்படவில்லை. மாறாக ‘கப்ரைச் சீர்படுத்து’ என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

‘தரை மட்டமாக்கு’ என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் ‘சீர்படுத்துதல்’ என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.

கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.

வானத்தை ஒழுங்குபடுத்தினான் என்று கூறும் பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:29

பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

திருக்குர்ஆன் 32:9

முதல் மனிதரைப் படைத்தது பற்றிக் கூறும் போது மனிதனைச் சீரமைத்தான் என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுகிறது. இதிலும் சவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதனைத் தரைமட்டமாக்கினான் என்று கூற முடியுமா எனவும் கேட்கின்றனர்.

சமாதிகளைக் கட்டக் கூடாது என்றும், அதிகப்படுத்தக் கூடாது என்றும், பூசக் கூடாது என்றும், பூசினால் இடிக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டகையிட்டு இருக்க, அதற்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு தவறான விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

சவ்வா என்ற சொல்லுக்கு அடக்கத்தலத்தை அழகாகக் கட்டுதல் என்ற பொருள் வராது என்பதைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.

ஸவ்வா என்ற சொல்லுக்கு சீர்படுத்துதல் என்ற பொருள் உண்டு. அதிகப்படுத்துவதன் மூலமும் சீர்படுத்துதல் ஏற்படும். குறைப்பதன் மூலமும் சீர்படுத்துதல் ஏற்படும். இன்னும் பல வகைகளிலும் சீர்படுத்துதல் ஏற்படும். எதைப் பற்றிப் பேசப்படுகிறது என்பதைப் பொருத்து இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.

கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.

அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.

அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.

இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற சொற்கள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.

உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சீராக்காமல் விடாதே என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري رقم فتح الباري (1/ 94)

فقال أنس: فكان فيه ما أقول لكم قبور المشركين، وفيه خرب وفيه نخل، فأمر النبي صلى الله عليه وسلم بقبور المشركين، فنبشت، ثم بالخرب فسويت، وبالنخل فقطع، فصفوا النخل قبلة المسجد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டுவதற்காக வாங்கிய இடத்தில் முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத் தலங்களும், குட்டிச் சுவர்களும் பேரீச்சை மரங்களும் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் கட்டளைப்படி அந்த அடக்கத்தலங்கள் தோண்டப்பட்டன. பின்னர் பாழடைந்த சுவர்கள் சமப்படுத்தப்பட்டன. பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டு கிப்லா திசையில் நடப்பட்டன.

புகாரி 428, 11868, 3932

குட்டிச் சுவர்கள் சமப்படுத்தப்பட்டன என்று மொழிபெயர்த்த இடத்தில் சவ்வா என்ற சொல்லில் இருந்து பிறந்த சுவ்வியத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. குட்டிச் சுவர்கள் தரைமட்டமாக்கப்பட்டதைக் குறிப்பதற்கு சவ்வா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமாதியை அழகுபடுத்தச் சொன்னார்கள் என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்பவர்கள் குட்டிச் சுவர்களை அழகாக அலங்கரித்து வைத்தார்கள் என்று பொருள் செய்வார்களா?

குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகுபடுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக ஆக்கப்பட்டன.

‘உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!’ என்பதற்கு ‘தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரைமட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.

சவ்வா என்ற சொல் இடம் பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டி வானங்களைத் தரை மட்டமாக்கினான் என்று அர்த்தம் செய்ய முடியுமா என்று இவர்கள் கேட்பது விதண்டாவாதமாகும்.

வானத்தைச் சீராக்கினான் என்று தான் நாம் பொருள் கொள்கிறோம். அது போல் கப்ரைச் சீராக்கினான் என்று பொருள் கொள்கிறோம். வானத்தை எவ்வாறு அமைப்பது சீர்படுத்துவதாக ஆகுமோ அவ்வாறு அல்லாஹ் ஆக்கினான். அது போல் சமாதிகளைச் சீர்படுத்துவது என்று கூறப்பட்டால் நபிகள் நாயகம் எதைத் தடுத்தார்களோ அதைத் தகர்ப்பதன் மூலம் சீராக்குதல் என்று பொருளாகும்.

பின்வரும் வசனத்தில் இருந்தும் சவ்வா என்பதன் பொருளை அறிந்து கொள்ளலாம்.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]‏

(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் “தம்மை பூமி விழுங்கி விடாதா?” என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.

திருக்குர்ஆன் 4:42

மேற்கண்ட வசனத்தில் சவ்வா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. காஃபிர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்பட்ட உடன் தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை உணர்வார்கள். நம்மைப் பூமி விழுங்கி தரைமட்டமாக நம்மை ஆக்கினால் மறுமை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமே என்று அவர்கள் கூறுவதைத் தான் சவ்வா என்ற சொல் மூலம் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

சமாதிகளை அழகுபடுத்த வேண்டும் என்று அர்த்தம் செய்தவர்கள் அதே அர்த்தத்தை இங்கே கொடுக்க முடியுமா? பூமியில் தங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எனப் பொருள் செய்ய முடியுமா?

கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த ஹதீஸுக்கு மட்டும்தான் இப்படி உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் ஹதீஸ்களைப் பற்றி வாய் இவர்கள் வாய் திறப்பதில்லை.

No comments:

Post a Comment