பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, June 14, 2014

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?


இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவர்களுடைய நிய்யத்தும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பதல்ல. இமாமுடைய தொழுகை கடமையானதாகவும் பின்பற்றி தொழுபவரின் தொழுகை நபிலாகவும் இருக்கலாம். அது போன்று இமாமுடைய தொழுகை அஸராகவும் பின்பற்றித் தொழுபவரின் தொழுகை லுஹராகவும் இருக்கலாம். இவ்வாறு இருவருடைய தொழுகையும் வேறுபடுவதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.
முஆத் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு இமாமாக இருந்தார்கள். அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழுகையை தொழுது விட்டு பிறகு தமது கூட்டத்தாருக்கு ஏற்கனவே தாம் தொழுத தொழுகையை தொழுவிப்பார்கள். இதை நபியவர்கள் ஆட்சேபணை செய்யவில்லை.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு)  முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (முஆத் (ரலி) அவர்களிடடம்) "(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ்
நூல் :புகாரி 701
முஆத் ரலி அவர்கள் நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழும் போதே அவர்களின் கடமை நிறைவேறிவிடுகிறது. பிறகு அதே தொழுகையை தம் கூட்டத்தாருக்கு இமாமாக நின்று தொழுவிக்கிறார் என்றால் இரண்டாவதாக தாம் தொழுவிக்கும் தொழுகை அவருக்கு உபரியாக ஆகிவிடுகிறது.
இந்நிலையில் நபிலான தொழுகையை தொழும் இமாமை (முஆத் ரலி அவர்களை) பின்பற்றி  அவர்களது கூட்டாத்தார்கள் கடமையான தொழுகை தொழுதுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
இது நபியவர்களின் கவனத்திற்கு வந்த போது முஆத் (ரலி) நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழுவிப்பதை கண்டித்தார்களே தவிர இவ்வாறு இமாமத் செய்வது கூடாது என்று கண்டிக்கவில்லை. எனவே இமாமுடைய தொழுகையும் பின்பற்றுபவர்களின் தொழுகையும் வேறுபடுவதற்கு நபிகளாரின் அங்கீகாரம் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் இது போன்ற நிகழ்வு நபிகளாரின் முன்னிலையில் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
நூல்கள் :  திர்மிதி (204) அபூதாவூத் 487
நபியவர்களுடன் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கும் ஒருவரை தாமதமாக வந்த ஒருவருடன் தொழுமாறு நபிகள் நாயகம் கூறுகிறார்கள். இங்கும் இருவருடைய தொழுகையும் வேறுபடுகிறது. ஒருவருக்கு கடமையாகவும் மற்றவருக்கு நபிலாகவும் அமைகிறது.
எனவே இமாம் மற்றும் பின்பற்றுபவருடைய தொழுகைகள் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு நபியவர்களுடைய வழிகாட்டுதல் மற்றும் அனுமதி உள்ளதால் இரவுத் தொழுகையை தொழும் இமாமுடன் சேர்ந்து கொண்டு ஒருவர் இஷா தொழுகையை தொழலாம். அது அனுமதிக்கப்பட்டதாகும்.
மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கஙளையும் வாசிக்கவும்

No comments:

Post a Comment