பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் ??

? பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன்படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒருவர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கான அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 577

இந்த ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள கஅப் பின் அல்கமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று தக்க காரணங்களுடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும், இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று தஹபீ கூறியுள்ளதாலும், இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும், பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர்.

கஅப் பின் அல்கமா என்பவரது நம்பகத்தன்மை குறித்து இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்தால், வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

ஆனால் கஅப் பின் அல்கமா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. புகாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து, அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.

ஹதீஸ்களைப் பதிவு செய்வதில் ஒவ்வொரு இமாமும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுத்துள்ளனர். இதில் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும், ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று தங்கள் அளவில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே அவரது ஹதீஸைப் பதிவு செய்வது என்பதை விதிமுறையாகக் கொண்டுள்ளனர்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.

புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து, மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி, அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.

கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது

--> Q/A Ehathuvam Magazine Jun 2009

No comments:

Post a Comment