பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 28, 2010

ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா?என்ன தவறு செய்கிறார்கள்?

? மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் தவறு செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு நரகம் என்றால் சரி! ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா? விளக்கவும்.




ஜின் இனம் என்பது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்ட ஓர் இனமாகும். மனிதர்களுக்கு இறைவன் தனது தூதர்களின் மூலம் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்திருப்பது போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன. மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் இறுதித் தூதராக வந்தவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

அல்குர்ஆன் 6:130

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

"ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்.

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான்.

"மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்'' என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

அல்குர்ஆன் 72:1-5

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

அல்குர்ஆன் 7:179

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்களைப் போன்று ஜின்களும் பகுத்தறிவு வழங்கப்பட்ட, நன்மை தீமை பிரித்தறிவிக்கப்பட்ட ஓர் இனம் என்பதை விளக்குகின்றன. ஆனால் மனிதர்களை விடப் பன்மடங்கு ஆற்றல் கொண்டது ஜின் இனம் என்றும், அவர்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 27:39, 40, 72:8,9, 7:12, 15:27, 38:76, 55:15)

எனவே மறுமையில் நல்லவர்கள் சுவனத்தை அடைவதும், கெட்டவர்களுக்கு நரகம் கூலியாகக் கிடைப்பதும் மனித இனத்தைப் போன்று ஜின்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஜின்கள் ஷைத்தான் இனத்தைச் சேர்ந்ததா? என்று கேட்டுள்ளீர்கள். ஷைத்தான் தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.

அல்குர்ஆன் 18:50

--> Q/A Ehathuvam Magazine July 2008

No comments:

Post a Comment