பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 19, 2010

ஜகாத்தை வசூலித்து, கடனாகக் கொடுத்து ???

தனி நபர்களும், பைத்துல்மால்களும் ஜகாத்தை வசூலித்து தேவையுள்ளோருக்குக் கடனாகக் கொடுத்து திரும்பப் பெற்று மீண்டும் கடனாகக் கொடுத்து நிர்வாகம் செய்கிறார்களே! இது கூடுமா

ஜகாத் நிதியை எட்டு வழிகளில் தான் செலவிட வேண்டும் என்று திருக்குர்ஆனில் தெளிவான கட்டளை உள்ளது. (பார்க்க 9:60)

எட்டு வகைகளில் ஒன்று கடனாளிகள் என்று அந்த வசனம் கூறுகிறது. இதன் பொருள் என்ன என்பது சாதாரணமாகவே அனைவருக்கும் புரிகிறது. ஆனாலும் சிலர் அறிஞர்கள் என்ற போர்வையில் ஏறுக்கு மாறாக விளக்கம் கொடுத்து நீங்கள் சுட்டிக்காட்டுவது போன்ற செயல்களை நியாயப்படுத்தி வருகின்றனர். கடனாளிகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற சொல் நாம் ஜகாத் கொடுப்பதற்கு முன்பே கடனாளிகளாக உள்ளவர்களைத் தான் குறிக்கும்.

ஒருவன் கடனாளியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவனது கடனைத் தீர்ப்பதற்காக ஜகாத் கொடுக்குமாறு இஸ்லாம் வழி காட்டுகிறது. ஆனால் அந்த மேதாவிகள் ஜகாத் நிதியைக் கடனாகக் கொடுத்து பின்னர் வாங்கலாம் என்று விளக்கம் கூறுகின்றனர். அதாவது ஏற்கனவே கடனாளியாக இல்லாதவனுக்குக் கொடுத்து அவனைக் கடனாளியாக ஆக்குவதற்கு ஜகாத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் என்ன பொருள். ஏற்கனவே ஏழையாக உள்ளவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தான் பொருள். ஏழையாக இல்லாதவனின் செல்வத்தைப் பறித்து ஏழையாக ஆக்கி விட்டு பின்னர் ஜகாத் கொடுப்பது என்பது இதன் பொருளல்ல.

பொதுமக்களிடம் ஜகாத்தைத் திரட்டி தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த வியாக்கியானத்தை அவர்கள் கூறுகிறார்களோ என்ற சந்தேகம் எற்படுகிறது. ஜகாத் நிதி எட்டு வகையில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமானதாகும். நிர்வகிப்பவர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளை ரொட்டேசன் செய்வது ஒருவகை மோசடியாகவே கருதப்படும். கொடுத்த ஜகாத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டால் கடனாளிகளுக்கு ஜகாத் கொடுக்கவில்லை என்பது தான் பொருள். எனவே எக்காரணம் கொண்டும் கொடுத்த ஜகாத்தைத் திரும்பப் பெறுவது குற்றமாகும். மக்களை வட்டியிலிருந்து மீட்டு எடுக்க வட்டியில்லாக்கடன் வழங்கும் வகையில் பைத்துல்மால் எற்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த வகைக்கு என்று குறிப்பிட்டு தனியாகத்தான் இதற்கான நிதியைத் திரட்ட வேண்டும். ஜகாத் நிதியைத் திரட்ட வேண்டும்.

 ஜகாத் நிதியை இந்த வகைக்குப் பயன்படுத்தக் கூடாது.

No comments:

Post a Comment