பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?

ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?




தொழுகையில் ருகூஹ்வில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி"என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் "ரப்பனா லகல் ஹம்து" அல்லது "ரப்பனா வ லகல் ஹம்து" அல்லது "அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து" அல்லது "அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து" என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் . அதற்கு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல் செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.

என்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதிதானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம் தானே, ஆனால் த.த.ஜ. சார்பில் சமீப காலமாக தாங்கள் ஒட்டக குர்பானியில் பத்து நபர்களை வலியுறுத்தி வருவது எவ்வாறு?

தொழுகையில் ஒரு கருத்தையும் குர்பானியில் ஒரு கருத்தையும் கொண்டிருப்பது தாங்கள் கூறிய நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் சம்பந்தமான வியாகியானதிற்கு தாங்களே முரண்பட்டதாக ஆகாதா?

தயவு செய்து விரிவான விளக்கம் தரவும்.

குறிப்பு : தொழுகையில் "ரப்பனா ...... ஹம்தன் கசீரன் .....பீஹி" என்று கூறுவதை எங்களுக்கு கூறியவரே நீங்கள் தானே.இப்போது அதனை தாங்களே குறை கூறுவது சரிதானா?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்,செயல் என்பது பெரிய அந்தஸ்து உடையது செயல் என்பது சிறிய அந்தஸ்து உடையது என்று இருக்குமானால் அதை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் தானே கூற வேண்டும். நகம் வெட்டுவதை கூட தம் சமூகத்தாருக்கு உரைத்து சென்ற அருமை நபிகள் (ஸல்) இதனை சொல்லாமல் விட்டு சென்றார்கள் என்பது உங்கள் கூற்றா?

பதில் :

உங்கள் கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன் அடிப்படையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்பதை ஓத வேண்டும் என்று சொல்லித் தந்ததே நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தகைய கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். இப்படி கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டும். நாங்கள் முதலில் சொன்ன ஒரு கருத்து தவறு என்று தெரிய வரும் போது நாங்கள் எப்படி நடக்க வேண்டும்? நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா? அல்லது அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா? உங்களிடம் உள்ள இதே மனப்பானமை அதிகமான முஸ்லிம்கலீடம் உள்ளதால் தான் எத்தனையோ உலமாக்கள் காலம் கடந்து அறிந்து கொண்ட உண்மைகளைச் சொல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.



முன்பு சொன்னதற்கு மாற்றமாகச் சொல்லலாமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு முன்பு சொன்னது ஏற்கத்தக்கதாக உள்ளதா? இப்போது சொல்வது ஏற்கத் தக்கதாக உள்ளதா என்று சிந்திப்பது தான் சரியான் பார்வை. மனிதன் தவறு செய்பவன் என்பதன் கருத்தும் இது தான். முன்பு சொன்னதை நாங்கள் டமாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக எங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்பது தான் பொருள். இப்படி யாரைப்பற்றியும் கருத வேண்டாம்.

தக்க காரணத்துடன் மாற்றப்படுகிறதா அல்லது காரணம் இல்லாமல் மாற்றப்படுகிறதா? இரண்டு கருத்தில் எது சரியான் அபார்வையில் அமைந்துள்ளது என்பதை மட்டும் பாருங்கள்.



தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.





799 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ عَنْ أَبِيهِ عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنْ الْمُتَكَلِّمُ قَالَ أَنَا قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ رواه البخاري

ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது "சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (த் தமக்கிடையே) போட்டியிட்டுக்கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்

கூறினார்கள்.

மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும் நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.

942 و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا قَتَادَةُ وَثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ فَأَرَمَّ الْقَوْمُ فَقَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا رواه مسلم

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ் வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவார் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது.



நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.

ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச்சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.

இந்த வாசகத்தை கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்கமாட்டார்கள்.

மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.

குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்த சன்றையும் நம்மால் காண முடியவில்லை.

வானவர்கள் எடுத்துச்செல்ல போட்டிபோடுகின்றார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிலாகித்த சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.



மாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழுவதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.



5458 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ثَوْرٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا رواه البخاري

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.

புகாரி (5458)

எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.



நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருக்கூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டு என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.

அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

635 ـ حدّثنا أبو نُعَيمٍ قال: حدَّثَنا شَيبانُ عن يحيى عن عبدِاللهِ بن أبي قَتادةَ عن أبيهِ قال: «بينما نحنُ نُصلِّي مع النبيِّ صلى الله عليه وسلّم إِذ سَمِعَ جَلَبةَ رجالٍ، فلما صلَّى قال: «ما شأْنُكم؟ قالوا: استَعْجلنا إلى الصلاة: قال: فلا تَفعلوا. إذا أتيتُمُ الصلاةَ فعلَيكم بالسَّكِينةِ، فما أدْرَكتم فصلُّوا، وما فاتَكم فأَتِمُّوا».



635 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள். புஹாரி 635

636 ـ حدّثنا آدمُ قال: حدَّثَنا ابنُ أَبي ذِئبٍ قال: حدَّثَنا الزُّهريُّ عن سعيدِ بن المسيَّبِ عن أبي هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم. وعنِ الزُّهريِّ عن أبي سلمةَ عن أبي هريرةَ عن النبيِّ صلى الله عليه وسلّم قال: «إذا سَمعتُمُ الإِقامةَ فامشوا إلى الصلاةِ وعليكم بالسَّكينةِ والوَقارِ، ولا تُسرِعوا، فما أدرَكتُم فصلُّلوا، وما فاتَكم فأتموا». [الحديث 636 ـ طرفه في: 908].



636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. புஹாரி 636



அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருக்கூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.

No comments:

Post a Comment