பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, September 19, 2025

துன்பங்களைப்_பொறுத்துக்கொள்ளுங்கள்


#துன்பங்களைப்_பொறுத்துக்கொள்ளுங்கள்

وَدَّ كَثِيرٌۭ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَـٰنِكُمْ كُفَّارًا حَسَدًۭا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ ۖ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ⭘ 

வேதமுடையோரில் அதிகமானோர், தமக்கு உண்மை தெளிவான பிறகும் தமது உள்ளங்களில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டு வரும்வரை அவர்களை விட்டு விடுங்கள்; அலட்சியம் செய்யுங்கள்! ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

அல் குர்ஆன் -   2 : 109

لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًۭى كَثِيرًۭا ۚ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ⭘ 

உங்களின் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்பு வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகளவு புண்படுத்தும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும்.

அல் குர்ஆன் -   3 : 186

2:109, 3:186 ஆகிய இருவசனங்களும் இணைவைப்பவர்கள், மற்றும் வேதக்காரர்களால் ஏற்படும் துன்பம், தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அருளப்பட்ட வசனங்களாகும். பின்வரும் சான்றிலிருந்து அதை அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபதக்’ நகரத்தின் முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) ‘அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்’ இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, “எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், நபி (ஸல்) அவர்களிடம், “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், யூதர்களும் ஒருவரையொருவர் ஏசத் தொடங்கி தாக்கிக் கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டு விடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீது ஆணையாக! தங்களுக்குத்தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் மறுத்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும், வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களின் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்பு வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகளவு புண்படுத்தும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
வேதமுடையோரில் அதிகமானோர், தமக்கு உண்மை தெளிவான பிறகும் தமது உள்ளங்களில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். அல்லாஹ் தனது ஆணையைக் கொண்டு வரும்வரை அவர்களை விட்டு விடுங்கள்; அலட்சியம் செய்யுங்கள்! ஒவ்வொரு பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (2:109)
அவர்கள் விஷயத்தில் (நடவடிக்கையெடுக்க) அல்லாஹ் அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது அல்லாஹ், அன்னாரின் மூலம் குறைஷி இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலை வணங்குவோரும் (இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள் என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி), நூல்: புகாரி (4566), முஸ்லிம் (3679)

No comments:

Post a Comment