பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

வித்ரு தொழுகைக்கு பின் நபில் ??

? வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா? விளக்கவும்.



இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது தான் சிறந்ததாகும். உறங்கி விடுவோம் என்று அஞ்சினால் இரவின் முற்பகுதியிலேயே தொழுது கொள்ளலாம்.

''இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ரு தொழுது விடட்டும். இரவின் இறுதியில் எழ முடியும் என்று நம்புகிறவர் இரவின் இறுதியிலேயே வித்ரு தொழட்டும். ஏனெனில் இரவின் இறுதியில் தொழும் போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1255

இவ்வாறு முற்பகுதியில் வித்ரு தொழுது விட்டுப் படுத்த பின், இரவில் விழித்தால் உபரியான தொழுகைகளைத் தொழலாமா? அவ்வாறு தொழுதால் மீண்டும் வித்ரு தொழ வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

''இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 998

இந்த ஹதீஸில் உங்க ளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் வித்ருக்குப் பிறகு வேறு தொழுகை எதையும் தொழக் கூடாது; வித்ருக்குப் பிறகு மீண்டும் தொழுதால் அதன் பிறகு கடைசியாக வித்ரு தொழ வேண்டிய நிலை ஏற்படும். ஒரே இரவில் இரண்டு வித்ரு தொழுவதற்குத் தடை உள்ளது. எனவே வித்ருக்குப் பின் தொழக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தாலும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ரு தொழுவார்கள். பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும் போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூவுச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப்
நூல்: முஸ்லிம் 1220

இந்த ஹதீஸில் வித்ர் தொழுத பின்னர் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுததாகக் கூறப் படுகின்றது. எனவே வித்ர் தொழுத பின்னர் தேவைப்பட்டால் தொழுவதில் தவறில்லை என்பதை அறிய முடியும்.

மேலும் இவ்வாறு தொழும் போது மீண்டும் வித்ர் தொழக் கூடாது.

''ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 432

ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்கனவே வித்ர் தொழுதவர்கள் மீண்டும் ஒரு முறை வித்ர் தொழக் கூடாது. அப்படியானால் இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இது முரணாக அமைகின்றதே என்ற சந்தேகம் ஏற்படலாம்.

வித்ர் என்பது ஒரு குறிப்பிட்ட தொழுகையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், வித்ர் என்றால் ஒற்றைப்படை என்று பொருள்.

இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். இறுதியில் அதை ஒற்றைப்படையாக ஆக்கி விட வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரணில்லை.

நபி (ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும் போது ''இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று ஒரு மனிதர் கேட்டார். ''இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். சுப்ஹை (தொழ முடியாது என்று) அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்க ளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 472

இரவில் ஒருவர் பத்து ரக்அத்கள் தொழுதுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழுகின்றார் என்றால் அவர் மொத்தம் தொழுதது பதினொரு ரக்அத்கள். அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கையும் ஒற்றைப்படையாக ஆகி விடுகின்றது.

அதன் பிறகு அவர் இரண்டு ரக்அத் தொழுதாலும் அவர் மீண்டும் வித்ர் தொழத் தேவையில்லை. ஏனெனில் அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை பதிமூன்று. இதுவும் ஒற்றைப்படை தான்.

எனவே இரவின் இறுதியாகத் தொழுகையை முடிக்கும் போது அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரணில்லை.

எனவே ஒருவர் வித்ர் தொழுத பின்னர் மீண்டும் எழுந்து வேறு தொழுகைகளைத் தொழுதாலும் அதன் பின்னர் வித்ர் தொழக் கூடாது. அவர் ஏற்கனவே தொழுத தொழுகை அதை வித்ராக்கி விடும்.

எனினும் நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் கடைசியாகவே வித்ர் தொழுதுள்ளதால் கடைசியாக வித்ர் தொழுவது தான் சிறந்தது.


--> Q/A Ehathuvam Jan 07

No comments:

Post a Comment