பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, August 31, 2025

ஆதம் நபி மன்னிப்பு கேட்டது எப்படி?

ஆதம்  நபி மன்னிப்பு கேட்டது எப்படி?

ஆதம் (அலை) அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக நபியவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள். எனவே நாம் மகான்களின் பொருட்டால் பாவமன்னிப்புத் தேடலாம் என வழிகெட்ட பரேலவிகள் கூறுகின்றனர்.

இது குர்ஆனுக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட ஒரு விசயமாகும்.

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிட மிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்:2:37.)

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இதில் கூறப்படாவிட்டாலும் கீழ்க்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லை யானால் நட்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன்:7:23.)

ஆதம் நபி பிரார்த்தனை செய்த வார்த்தைகள் இவை தான் என்று மேற்கண்ட வசனம் தெளிவு படுத்துகிறது. இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக பரேலவிகள் கூறும் கட்டுக்கதை இதுதான்:

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழை வாயிலில் “லாயிலாஹ இல்லல் லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப் பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?” என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் “அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர்.

அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்” என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். “இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப் படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவ மன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.

எனவே இந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்

No comments:

Post a Comment