பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 14, 2010

குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?

குர்ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?


குர்ஆன் ஏன் அரபியில் ஏழுதப்பட்டுள்ளது? ஏன் அரபியில் படிக்கப்படுகின்றது? முஸ்லிம்கள் ஹஜ்ஜை மட்டும் மக்காவில் குறிப்பிட்ட இடத்தில் ஏன் செய்கிறார்கள்?


திருமறைக் குர்ஆன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நேர்வழிகாட்டியாக அருளப்பட்டிருக்கின்றது. மொழி நாடு இனம் நிறம் என்ற வேறுபாடு இல்லாமல் இது அனைவருக்கும் உரிய பொதுமறையாகும்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ (185)2

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

அல்குர்ஆன் (2 : 185)

எனவே குறிப்பிட்ட மொழியினரோ நாட்டினரோ குர்ஆன் எங்களுக்கு மட்டும் உரியது என்று சொந்தம் கொண்டாட முடியாது.

இந்தக் குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபு மட்டுமே தெரியும். எனவே அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.

உலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழி தான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தக் குர்ஆனை மக்களிடம் கொண்டுசெல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில் தான் அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.

எந்த மொழியில் குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழிபேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ் மொழியில் குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கில மொழிபேசுபவர்கள் ஆங்கிலத்தில் குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.

இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு எந்த மதிப்பும் கிடையாது.

22391 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபு மொழி பேசுபவருக்கு எந்த சிறப்பும் இல்லை. அரபு மொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்த சிறப்பும் இல்லை.

நூல் : அஹ்மது (22391)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.

إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خلَا فِيهَا نَذِيرٌ(24)35

நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.

அல்குர்ஆன் (35 : 24)

எனவே எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. வணக்கத்தில் உலக முஸ்லிம்களுக்கிடையே ஒருமைப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தொழுகைகளில் குர்ஆன் அரபியில் ஓதப்படுகின்றது. உலகம் முழுவதிலும் தொழுகையில் அரபு மொழியில் ஓதப்படுவதால் எந்த மொழி பேசக்கூடியவரும் ஓதப்படுவது குர்ஆன் தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.

வெவ்வேறு மொழி பேசக்கூடியவர்களுடைய ஒருமைப்பாடு ஏற்படவேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மொழியை பொதுவான மொழியாக ஆக்க வேண்டும். உதாரணமாக நம் நாட்டின் தேசிய மொழி இந்தி மொழியாக ஆக்கப்பட்டிருக்கின்றது. நம் நாட்டின் தேசிய கீதம் வங்காள மொழியில் உள்ளது. வங்காள மொழியில் தேசீய கீதம் பாடப்பட்டால் அது தேசீய கீதம் என்பதை வேறு மொழி பேசுபவர்களும் புரிந்துகொள்கிறார்கள். ஒரு நாட்டில் ஒருமைப்பாடு நிலவுவதற்கே ஒரு குறிப்பிட்ட மொழி பொதுவானதாக ஆக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றதென்றால், இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மார்க்கம். திருக்குர்-ஆன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுமறை. எனவே அது ஒரு குறிப்பிட்ட அரபி மொழியில் இறக்கப்பட்டது என்பதற்கும், தொழுகை போன்ற பொதுப்படையான வணக்க வழிபடுகள் மட்டும் அரபி மொழியில் இருப்பதற்கும் கூடுதல் நியாயங்கள் உள்ளன.

இந்த அடிப்படையில் தான் குர்ஆனும் அரபுமொழியில் எழுதப்படுகின்றது. படிக்கப்படுகின்றது. குர்ஆனின் அரபு வாசகங்கள் இறைவனின் வார்த்தைகள் என்ற காரணத்துக்காக அதை அப்படியே முஸ்லிம்கள் ஓதுகிறார்கள். மேலும் குர்ஆனின் மூல மொழியான அரபியில் முஸ்லிம்கள் குர்ஆனை ஓதிவருவதால் குர்ஆனுடைய மூலமொழி அழிந்துவிடாமல் அதை பாதுகாக்கின்ற நன்மையும் ஏற்படுகின்றது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் தங்களது பிரார்த்தனைகள் மற்றும் ஜும்ஆ பிரசங்கங்கள் போன்றவற்றை அவரவர் தாய்மொழியில் தான் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாம் எத்தகைய தடையையும் விதிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.



அரபியில் மட்டும் குர்ஆனை படிக்கப்படுவதில்லை. ஆங்கிலம், தமிழ், மலையாளம் இன்னும் ஏராளமான மொழிகளில் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்து முஸ்லிம்கள் ஹஜ்ஜை மட்டும் மக்காவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏன் நிறைவேற்றுகிறார்கள்? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

மக்காவில் உள்ள கஅபா என்பது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் முதன் முதலில் இந்த உலகத்தில் கட்டப்பட்ட இறையில்லம் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம்களுக்கிடைய உலகளாவிய அளவில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஆலயத்தில் ஹஜ்ஜின் போது மக்கள் ஒன்றுகூடவேண்டும் என்று இறவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.

அதாவது இன்றைக்கு உள்ள மக்கள் அனைவரும் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்குப் பிறந்தவர்கள். இவர்களில் சிவப்பு நிறத்தில் உள்ளவர் கருப்பரை விட உயர்ந்தவர் இல்லை. அமெரிக்கர்கள் மற்ற நாட்டினரை விட உயர்ந்தவர்கள் இல்லை. ஆதமுடைய மக்கள் அனைவரும் சமமானவர்களே என்ற சமத்துவத்தை செயல்வடிவில் நிலைநாட்டவே கஅபாவிற்கு முஸ்லிம்கள் வருகை தருகின்றனர்.

ஜாதி, இனம், மொழி, நாடு, நிறம், ஏழை, பணக்காரன் ஆகிய எந்த வேறுபாடும் இல்லாமல் அங்கு அனைவரும் சமத்துவமாக நடந்துகொள்வதை இன்றைக்கும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். உலகளாவிய சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் செயல் வடிவில் காட்டும் நிகழ்வாக ஹஜ் திகழ்கின்றது

இது குறித்து அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் என்ற நூலில் 26. திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? என்ற தலைப்பையும் வாசிக்கவும்


26. திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று மாற்று மத நண்பர்கள் கேட்கிறார்.

பதில்: மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 14:4)

ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)

No comments:

Post a Comment