பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

குல்ஆ தொடர்பாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கவும்.??

? எங்கள் உறவினரில் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தார் கொடுமைப் படுத்தியதால் மனம் வெறுத்து, தன் தாய் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டாள். அவளது கணவன் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர். அவரிடம் தலாக் கேட்டு தர மறுத்து விட்டதால், பெண் வீட்டார் குல்ஆ கேட்டு, ஆலிம்களிடம் சென்றால் அவர்கள் பலவிதமான கருத்துக்களைக் கூறுகின்றனர். எனவே குல்ஆ தொடர்பாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கவும். மேலும் இதில் நீதிமன்றத் தலையீடு இருக்குமா? குல்ஆவுக்குப் பின் மஹர் மற்றும் சீதன பரிமாற்றம் பற்றியும் தெரிவிக்கவும்.




கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வு அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் குல்உ எனப்படுவதாகும்.

இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோர் இதை நடைமுறைப் படுத்துவதில்லை.

-->  ஒரு பெண்ணுக்குத் தனது கணவனைப் பிடிக்கவில்லை என்றால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடமோ அல்லது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தால் ஆட்சித் தலைவரிடமோ முறையிட வேண்டும்.

-->  அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் கணவனிடம் திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

--> அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்வார்.

--> மஹராகக் கொடுத்ததை விட எதையும் அதிகப்படியாக கணவன் கேட்க முடியாது.

-->  கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

-->  கணவனே தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல் குல்உ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.

-->  தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய் வரை அவள் மறு மணம் செய்யக் கூடாது. ஆனால் குல்உ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய் வரும் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு அவள் மறுமணம் செய்யலாம்.

-->  இவ்வாறு பிரிந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இவை தான் குல்உ என்பதன் விதிமுறைகளாகும். முஸ்லிம் பெண்களில் பெரும்பாலோருக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இந்தச் சட்டங்கள் தெரியாததாலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற போலித்தனத்தில் அவர்கள் ஊறிப் போய் விட்டதாலும் பெண்கள் இன்று கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ''சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ''தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, ''அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் ''சரி'' என்றார். அப்பெண்மணியிடம் ''ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440

இந்த ஹதீஸ்களில் அந்தப் பெண்மணி தன் கணவரைப் பற்றி எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக அவரது நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறுகின்றார். தான் கணவரை விட்டுப் பிரிய விரும்புவதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்து விடுவேனோ என்று அச்சமாக உள்ளதையே காரணம் காட்டுகின்றார்.

கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான காரணம் எதையும் கூற வேண்டியதில்லை என்பதையும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாலே போதுமானது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

கணவன் தலாக் கூறினால் தான் குல்உ நிறைவேறும் என்று சிலர் கூறுகின்றர். ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.

கணவனால் கொடுமைப் படுத்தப் படும் பெண் அவனிடமிருந்து பிரிய விரும்புகின்றாள். இந்த நிலையில் அவன் மறுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய வேண்டும் என்றால் காலமெல்லாம் அவள் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கொடுமைகள் நிகழும் போது அதைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ள தலைவரும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். தொடர்ந்து பெண்களுக்கு அக்கிரமம் செய்யப் படுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடுமாறும் முடியுமானால் கையால் தடுக்க வேண்டும் எனவும் கூறும் இஸ்லாம் இந்த அக்கிரமத்தை அனுமதிக்குமா? இந்தக் கோணத்தில் பார்த்தாலும் குல்உ என்பதற்கு அந்தக் கணவனின் சம்மதமோ, அவனது தலாக்கோ தேவையில்லை என்பது தெளிவாகின்றது.

இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (அல்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

திருமணத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு இருப்பது போன்று மனைவிக்கும் உரிமை இருப்பதை இந்த வசனங்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. கணவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

குல்உ தொடர்பான மற்ற ஆதாரங்களைக் காண்போம்.

இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332வது ஹதீஸில், ''அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

கொடுத்த மஹரை விட வேறெதனையும் அந்தக் கணவன் கேட்க முடியாது. தலைவரும் வற்புறுத்த முடியாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

''ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும் தெளிவாகின்றது.

ஆக பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிவதாக இருந்தால் ஜமாஅத்தில் முறையிட வேண்டும். ஜமாஅத் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிலிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும். கணவனைப் பிடிக்காமல், பிரியவும் வழி தெரியாமல் வாழா வெட்டிகளாகப் பிறந்த வீட்டில் கண்ணீர் வடிக்கும் அபலைப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

கணவன் தலாக் விடாத வரை அந்த உறவை ரத்துச் செய்ய முடியாது என்று அஞ்சும் ஜமாஅத் தலைவர்களுக்காக ஒரு முக்கியமான ஹதீஸைச் சமர்ப்பிக்கிறோம்.

ஸாபித் என்பாருக்கு அப்துல்லாஹ்வுடைய மகள் மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். (அந்த வழக்கு வந்த போது) ''உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, ''ஆம். அதை விட அதிகமாகவும் கொடுக்கிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அதிகமாக வேண்டாம். அவரது தோட்டத்தை மட்டும் கொடு'' என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி (ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்த போது, ''அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர்
நூல்: தாரகுத்னீ 39

கணவனின் தலாக்கைப் பெறாமல் நபியவர்களே மஹரைப் பெற்றுக் கொண்டு ரத்து செய்கின்றார்கள். இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவருக்கே பிறகு தான் தெரிகின்றது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் தெளிவாக அறிய முடிகின்றது.

மத்ஹபுகளைப் பின்பற்றும் ஜமாஅத்தினர் பெரும்பாலும் இதைச் செய்வதில்லை. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மத்ஹபுகளின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப் படும். ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனவே சில சட்ட நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கை அணுக வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் இந்தச் சட்டச் சிக்கல்கள் ஏற்படாமல் குல்உ பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள்

--Q/A Ehathuvam May 06

No comments:

Post a Comment